Published : 23 Aug 2014 10:00 AM
Last Updated : 23 Aug 2014 10:00 AM
முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையில் முடக்கிய சொத்துகளை விற்பனை செய்ய நிறுவனங்களை நியமிக்க பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) முடிவு செய்துள்ளது.
முதலீட்டாளர்களைக் காக்க மோசடி நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பது அவற்றின் சொத்துகளை முடக்குவது உள்ளிட்ட பணிகளை செபி மேற்கொண்டு வருகிறது. இத்துடன் முடக்கிய சொத்துகளை விற்பனை செய்வதற்கு உரிய நிறுவனங்களை நியமிக்கவும் செபி முடிவு செய்துள்ளது.
முறைகேடாக செயல்பட்ட நிறுவனங்களுக்கு தடை விதிப்பதோடு அவற்றின் சொத்துகளை முடக்கும் அதிகாரமும் செபி-க்கு உள்ளது.இவ்விதம் முடக்கப்பட்ட அசையும் மற்றும் அசையா சொத்துகளை விற்பனை செய்ய உரிய நிறுவனங்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விதம் முடக்கப்பட்ட சொத்துகளில் நிலம், கட்டிடம், தொழிற்சாலை, இயந்திரங்கள், மரக்கட்டைகள், உணவுப் பொருள்களும் அடங்கும்.
இத்தகைய பொருள்களை விற்பனை செய்ய ஆர்வமுள்ள நிறுவனங்கள் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என செபி தெரிவித்துள்ளது.
இவ்விதம் நியமிக்கப்படும் நிறுவனங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு இப்பணியில் ஈடுபடலாம். கடந்த ஓராண்டில் செபி 1,500 நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இவ்விதம் விற்பனை செய்யப்பட்டதன் மூலம் ரூ. 1,600 கோடி மீட்கப்பட்டது. இந்த நிறுவனங்களின் முடக்கப்பட்ட சொத்துகளை ஏலம் விடும்வரை பராமரிக்க வேண்டும்.
அத்துடன் அந்த சொத்துகளின் மதிப்பை இறுதி செய்ய வேண்டும். இதுபோன்ற பணிகளில் குறைந்தது 3 ஆண்டு அனுபவம் உள்ள ரூ. 2 கோடிக்குமேல் சொத்துள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என செபி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT