Published : 04 Nov 2023 06:57 AM
Last Updated : 04 Nov 2023 06:57 AM

கடந்த 9 ஆண்டுகளில் உணவு பதப்படுத்தும் துறையில் ரூ.50,000 கோடி அந்நிய முதலீடு: பிரதமர் மோடி

டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் ‘வோர்ல்ட் ஃபுட் இந்தியா 2023’ நிகழ்ச்சியை நேற்று தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி.

புதுடெல்லி: உலகின் உணவு கூடமாக இந்தியாவை வெளிப்படுத்த ‘வோர்ல்ட் ஃபுட் இந்தியா’ என்ற பெயரில் முதல் நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு நடத்தப்பட்டது. கரோனா பெருந்தொற்று காரணமாக அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்நிகழ்ச்சியை நடத்த முடியவில்லை.

இந்நிலையில் இந்தாண்டு சிறுதானியங்களின் ஆண்டாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு 2-வது ‘வோர்ல்ட் ஃபுட் இந்தியா’ நிகழ்ச்சி டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று முதல் 5-ம் தேதி வரைநடத்தப்படுகிறது. இதில் 80 நாடுகளைச் சேர்ந்த உணவு பதப்படுத்துதல் நிறுவனங்களின் சிஇஓ.க்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ‘ஃபுட் ஸ்ட்ரீட்’ உணவு கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதில் இந்திய சமையல் கலைஞர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று இந்திய பாரம்பரிய சமையல் வகைகளை செய்து காட்டுகின்றனர்.

அரசு அமைப்புகள், தொழில் துறையினர், விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும் இதரபிரிவினர், வேளாண் உணவு துறையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்க இந்நிகழ்ச்சி சிறந்த தளமாகஅமைந்துள்ளது. பல நிறுவனங்களின் சிஇஓ.க்கள் முதலீடு குறித்து ஆலோசிப்பதற்கான வட்ட மேஜை கூட்டமும் இந்நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த 3 நாள் நிகழ்ச்சியில் உணவு பதப்படுத்துதல் துறை தொடர்பான 48 நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. உணவு பதப்படுத்துதல் துறையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள தொழில்நுட்பம் மற்றும் இயந்திரங்கள் ஆகியவை பற்றியும் இங்கு விளக்கம் அளிக்கப் படுகின்றன.

இந்நிகழ்ச்சி மூலம் உணவு பதப்படுத்துதல் துறையில் அந்நியநேரடி முதலீடு ரூ.75,000 கோடிக்கும் மேல் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:

உணவு பதப்படுத்துதல் துறை வளர்ந்து வரும் துறையாக அங்கீகரிக்கப்படுவதற்கு ‘வோர்ல்ட் ஃபுட் இந்தியா’ நிகழ்ச்சியே சிறந்த உதாரணம். உணவு பதப்படுத்தும் துறையில், கடந்த 9 ஆண்டுகளில் ரூ.50,000 கோடி அந்நிய நேரடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. உணவு பதப்படுத்துதல் துறைக்கும், விவசாய கொள்கைகளுக்கும் ஆதரவான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதால் அந்நிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது.

முதலீட்டாளர்களுக்கு சாதகமான கொள்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதால், உணவுத்துறை புதிய உச்சத்துக்கு சென்றுள்ளது. இந்திய வேளாண் ஏற்றுமதியில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் பங்கு 13 சதவீதத்திலிருந்து 23 சதவீதமாக அதிகரித்துள்ளது. பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் மொத்த ஏற்றுமதி 150 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x