Published : 29 Oct 2023 03:56 AM
Last Updated : 29 Oct 2023 03:56 AM

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.520 அதிகரிப்பு - ஒரு பவுன் ரூ.46,000-ஐ தாண்டியது

சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.520 அதிகரித்து ரூ.46,160-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை மீண்டும் ரூ.46 ஆயிரத்தைக் கடந்துள்ளதால் நகை வாங்குவோர் கவலை அடைந்துள்ளனர்.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த ஆண்டு டிச.25-ல் ஒரு பவுன் தங்கம் ரூ.42,760-க்கு விற்பனையானது. மறுநாள், 26-ம் தேதி ரூ.43,040 ஆக உயர்ந்தது. பின்னர், இந்த ஆண்டு பிப்.2-ல் ஒரு பவுன் ரூ.44,040-க்கு புதிய உச்சத்தை எட்டி விற்பனையானது. பின்னர், கடந்த மார்ச் 5-ம் தேதி ஆபரண தங்கத்தின் விலை பவுன் ரூ.45,520-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை எட்டியது. தொடர்ந்து, படிப்படியாக உயரத் தொடங்கிய தங்கம் விலை, கடந்த மே 1-ம் தேதி பவுனுக்கு 45,040-க்கும், 3-ம் தேதி ரூ.45,648-க்கும் விற்பனை ஆனது. மேலும், கடந்த ஜுன் மாதம் 4-ம் தேதி ஒரு பவுன் விலை ரூ.46 ஆயிரத்துக்கு உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்தது.

இந்நிலையில், தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.65 அதிகரித்து ரூ.5,770-க்கும், பவுனுக்கு ரூ.520 அதிகரித்து ரூ.46,160-க்கும் விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை பவுன் ரூ.49,920-க்கு விற்பனையானது. இதுகுறித்து நகை வியாபாரிகள் கூறும்போது, காசா போர், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு ஆகியவை தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணங்கள். அத்துடன், மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது என்றனர். தீபாவளி, முகூர்த்த நாட்களை முன்னிட்டு தங்க நகை வாங்க திட்டமிட்டு இருந்தவர்கள் தற்போது இந்த விலை உயர்வை கண்டு கவலை அடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x