Published : 27 Oct 2023 04:04 AM
Last Updated : 27 Oct 2023 04:04 AM

சின்ன வெங்காயம் விலை மீண்டும் உயர்வு: கிலோ ரூ.100-க்கு விற்பதால் ஓசூர் மக்கள் கவலை

ஓசூர்: ஓசூரில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுவதால், நடுத்தர மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

ஓசூர் சுற்று வட்டாரப் பகுதியில் நிலவும் சீதோஷ்ண நிலை மலர்கள் மற்றும் காய் கறிகள் சாகுபடிக்குக் கைகொடுப்பதால், இப்பகுதி விவசாயிகள் மலர்கள் மற்றும் காய் கறி சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் சிறிய வெங்காயம் பரவலாகச் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் தொடர் மழை பெய்ததால், சின்ன வெங்காயம் மகசூல் பாதிக்கப்பட்டு, ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனையானது. அதன் பின்னர் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலத்திலிருந்து சந்தைக்குச் சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்து விலை குறைந்தது. கடந்த மாதம் கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை விலை குறைந்தது.

இதனிடையே, கடந்த சில வாரங்களாக வெளி மாவட்டத்திலிருந்து வரத்து மீண்டும் குறைந்ததால், கடந்த சில நாட்களாக மீண்டும் விலை உயர்ந்தது. நேற்று ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனையானது. இதனால் நடுத்தர மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக வியாபாரிகள் சிலர் கூறியதாவது: கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தில் பரவலாகச் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. உள்ளூரில் சின்ன வெங்காயம் தரம் குறைவு என்பதால் ஒட்டன்சத்திரம், ஈரோடு, திண்டுக்கல் பகுதி சின்ன வெங்காயத்துக்கு சந்தையில் நல்ல விலையும், வரவேற்பும் கிடைக்கும்.

இந்நிலையில், உள்ளூரில் மகசூல் குறைந்ததாலும், வெளி மாவட்டத்திலிருந்து சந்தைக்கு வரத்து குறைந்ததாலும் தற்போது முதல் தரமான சின்ன வெங்காயம் கிலோ ரூ.100-க்கும், 2-ம் தரம் ரூ.70-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு தொடர்ந்து 3 மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x