Published : 04 Oct 2023 06:30 PM
Last Updated : 04 Oct 2023 06:30 PM

மின் கட்டண உயர்வுக்கு எதிராக அக்.16-ல் 20,000 பேர் உண்ணாவிரதம்: தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு

மதுரையில் தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

மதுரை: ‘‘மின் கட்டண உயர்வை திரும்பப்பெறக் கோரி அக்டோபர் 16-ம் தேதி சென்னையில் 20 ஆயிரம் பேர் பங்கேற்கும் உண்ணாவிரதம் போராட்டம் நடக்க உள்ளது’’ என்று தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இதன் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ், ஜெபால், செல்வராஜ், ராஜப்பா, கோபி பழனியப்பன், முத்துரத்தினம், ஸ்ரீகாந்த் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பினர் கடந்த மாதம் 25-ம் தேதி மதுரை உட்பட தமிழகமெங்கும் தொழிற்சாலைகளில் ஒரு நாள் உற்பத்தி நிறுத்தம், கதவடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதைத் தொடர்ந்து தமிழகஅரசு, தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்து குறு சிறு தொழில் துறை மற்றும் தொழில்துறை அமைச்சர் முன்பாக பேச்சுவார்த்தை நடத்தியது. இதில், தொழில்துறை நிறுவனங்களுக்கான 430 சதவீதம் உயர்த்திய நிலைக்கட்டணத்தை (Fixed Charges) திரும்ப பெற வேண்டும். பரபரப்பு நேர கட்டணம் (Peak Hours Charges) கட்டணத்தை திரும்ப பெற வேண்டும்.

சோலார் (Solar) மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். Multi Year Tariff-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்துவதை தவிர்க்க வேண்டும். 3B-யில் இருந்து 3A1 நடைமுறைக்கு மாற்ற வேண்டும் என்ற 5 அம்ச கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்த நிலையில், நாங்கள் வலியுறுத்திய, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 3A1 நடைமுறையை 12kw-க்கும் கீழ் இணைப்புகள் பெற்ற அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற கோரிக்கையை ஏற்பதாக தமிழக அறிவித்தது. ஆனால், மற்ற எந்த கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் தமிழக தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து தொழில் துறை சார்ந்த சங்கப் பிரதிநிதிகளுடன் புதன்கிழமை மதுரையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், 4 கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்தகட்ட போராட்டங்களை தீவிரமாக தொடர்வது என தீர்மானம் நிறைவேற்றப்பபட்டது.

அதன்படி, தொழில்துறை நிறுவனங்களின் கோரிக்கையை, அரசு ஏற்காத நிலையில் வரும் 9-ம் தேதி அனைத்து தொழில்துறை சார்ந்தவர்களும், தொழிற்சாலைகளில் கருப்புக் கொடி ஏற்றியும் கருப்புபட்டை அணிந்தும் குறைதீர் முகாம் நாளில், தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை சமர்ப்பிக்க உள்ளோம்.அதனைத்தொடர்ந்து வரும் 16-ம் தேதி, தமிழக முதல்வரின் நேரடி கவனத்தை ஈர்க்கும் விதமாக தமிழக தொழில் துறையினர் அனைவரும் சென்னை தலைநகரில் மாநிலம் தழுவிய உண்ணாவிரதம் மேற்கொள்ள இருக்கிறோம். இதில், 20 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்.

தொழில்துறை நிறுவன மின்நுகர்வோர்களின் கோரிக்கைகளை முதல்வர் கண்டுகொள்ளவில்லை. இதனால் 30 சதவீதம் சிறுகுறுந் தொழில் முடங்கிவிட்டது. இது நீடித்தால் முழுமையாக தொழில்துறை அழியும் அபாயம் உள்ளது. சிறு, குறு தொழில் நிறுவனங்கள்தான் நாட்டிலேயே அதிக தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குகிறது. போர்க்கால அடிப்படையில் தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் உரிய பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மின் கட்டணம் குறித்து முதல்வரின் அறிக்கையில் பழைய கட்டண குறைப்பு குறித்து குறிப்பிட்டுள்ளார்.

மின்வாரிய அதிகாரிகள் முதல்வருக்கு தவறான தகவல்களை தருகின்றனர். முதல்வரிடம் மின்வாரிய அதிகாரிகள் கொடுத்த கடிதத்தை அவர் வாசிக்கிறார். மாம்பழ சீசன், பட்டாசு சீசன் கால தொழிற்சாலைகள் இது போன்ற மின் கட்டண நடைமுறைகளால் நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது. வரும் 16-ம் தேதியும், கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட போராட்டம் குறித்தான அறிவிப்பை வெளியிடுவோம்" என்று அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x