Last Updated : 25 Sep, 2023 08:32 AM

 

Published : 25 Sep 2023 08:32 AM
Last Updated : 25 Sep 2023 08:32 AM

ஆண்டு முழுவதும் நிரந்தர விலை கிடைக்க ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை: விவசாயிகள் கோரிக்கை

தேன்கனிக்கோட்டையில் அறுவடை செய்யப்பட்ட தக்காளி விற்பனைக்கு அனுப்ப மலைபோல கொட்டி வைக்கப்பட்டுள்ளது.

ஓசூர்: ஆண்டு முழுவதும் நிரந்தர விலை கிடைக்க ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு தக்காளி விநியோகம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓசூர் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓசூர், பாகலூர், கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, தளி உள்ளிட்ட பகுதிகளில் காய்கறி பயிர் சாகுபடியில் விவசாயிகள் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு நிலவும் தட்ப வெப்ப நிலை மற்றும் மண் வளம் காய்கறி சாகுபடிக்கு பெரிதும் கை கொடுத்து வருகிறது. மேலும், ஓசூர் காய்கறி சந்தை மூலம் சந்தை வாய்ப்பும் விவசாயிகளுக்கு கிடைத்து வருகிறது.

குறிப்பாக, இங்கு அறுவடையாகும் தக்காளி தமிழகம் மட்டும் அல்லாமல் அண்டை மாநிலங்களுக்கும் தினசரி விற்பனைக்குச் செல்கிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் தக்காளி மகசூல் பாதிக்கப்பட்டதால், சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்தது.

இதையடுத்து, ஓசூர் பகுதி விவசாயிகளிடையே தக்காளி சாகுபடியை ஊக்கப்படுத்தும் விதமாக தோட்டக்கலைத் துறை மூலம் தக்காளி நாற்றுகள் இலவசமாக வழங்கி தக்காளி சாகுபடி பரப்பை அதிகரித்தனர். இதனிடையே, புதிய நடவு தோட்டங்களில் தற்போது தக்காளி அறுவடைக்கு வரத் தொடங்கியுள்ளது. மேலும், கடந்த காலங்களை விட 85 சதவீதம் மகசூல் அதிகரித்துள்ளது.

இதனால், சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்து விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன்னர் சில்லறை விற்பனையில் கிலோ ரூ.12-க்கு விற்பனையான நிலையில் நேற்று ரூ.6 முதல் ரூ.8-க்கு விற்பனையானது. அதே நேரம் விவசாயிகளிடம் கிலோ ரூ.3-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக விவசாயிகள் சிலர் கூறியதாவது: தக்காளிக்கு சந்தையில் ஆண்டு முழுவதும் நிரந்தர விலை இல்லாததால், மகசூல் அதிகரிக்கும்போது விலை குறைந்து விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, தக்காளிக்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

மேலும், விலை உயரும் போது ரேஷன் கடைகள் மூலம் தக்காளியை மலிவு விலைக்கு விற்பனை செய்வதைப்போல, மகசூல் அதிகரிக்கும் போது, விவசாயிகளை காக்க விவசாயிகளிடம் கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் நிரந்தர விலை கிடைக்க வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

15 ஆயிரம் ஏக்கரில் தக்காளி சாகுபடி - தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஓசூர் பகுதியில் நிரந்தரமாக 10 ஆயிரம் ஏக்கரில் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மழை மற்றும் நோய் தாக்கத்தால் தமிழகம் முழுவதும் தக்காளி மகசூல் பாதிக்கப்பட்டதால், விலை உயர்ந்தது. இதையடுத்து, ஓசூர் வட்டாரத்தில் 10 லட்சம் தக்காளி நாற்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

இதனால், 15 ஆயிரம் ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டது. தற்போது, நிலவும் சீதோஷ்ண நிலை தக்காளி செடிக்கு ஏற்றதாக உள்ளதால், வழக்கமாக ஒரு செடியில் 2 கிலோ வரை தக்காளி அறுவடை கிடைக்கும் நிலையில், தற்போது, 3 கிலோ வரை கிடைக்கிறது. இதனால், சந்தை தேவையை விட தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x