Last Updated : 18 Sep, 2023 02:50 PM

 

Published : 18 Sep 2023 02:50 PM
Last Updated : 18 Sep 2023 02:50 PM

நவீன தள்ளுவண்டிகள்... கேட்டதோ 800, கிடைத்ததோ 20 - உடுமலை சாலையோர வியாபாரிகள் அதிருப்தி

உடுமலை: மத்திய, மாநில அரசுகளின் திட்டத்தின் கீழ் உடுமலையில் 800 சாலையோர வியாபாரிகளுக்கு நவீன தள்ளுவண்டிகள் தேவையுள்ள நிலையில், 20 வண்டிகள் மட்டுமே வரப்பெற்றுள்ளன. அதுவும் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நகராட்சி அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் அதிருப்தியில் உள்ளனர்.

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட மத்திய பேருந்து நிலையம், நேதாஜி சாலை, பொள்ளாச்சி சாலை, ராஜேந்திரா சாலை, உழவர் சந்தை உள்ளிட்ட இடங்களில் ஏராளமான சாலையோர வியாபாரிகள் கடை வைத்துள்ளனர்.

இவர்கள் தங்களின் வாழ்வாதாரத்துக்காக பூ, பழ வகைகள், துணிகள், காலணிகள், மின் சாதனங்கள், விளையாட்டு பொருட்கள், கீரை, காய்கறி, உணவு உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்திட நகராட்சியால் கணக்கெடுப்பு நடைபெற்றது.

அவர்கள் வியாபாரம் செய்து வரும் இடத்திலேயே தொடர்ந்து செய்திட உதவும் வகையில் கடனுதவி அளிப்பது, எஸ்எஸ் மெட்டீரியல் கொண்டு தயார் செய்யப்பட்ட தள்ளுவண்டிகள் வழங்குவது உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டது.

அந்த வகையில் மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவி மூலம் வறுமை நிலையில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு வழங்குவதற்காக தள்ளுவண்டிகள் தருவிக்கப்பட்டு, நகராட்சி அலுவலக வளாகத்தில் 2 மாதங்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து நகராட்சி அலுவலர்கள் கூறியதாவது: சாலையோர வியாபாரிகளுக்கு வழங்கப்படவுள்ள தள்ளுவண்டிகள் எளிதில் துருப்பிடிக்காது. சாலையோர சிற்றுண்டி உணவகம் நடத்த தேவையான பாத்திரங்கள் அடுப்பு, சமையல் காஸ் சிலிண்டர் ஆகியவற்றை வைத்துக் கொள்வதற்கு தேவையான கதவுடன் கூடிய இடவசதி உள்ளது.

பார்வைக்கு பொருட்களை வைப்பதோடு, அவற்றை எளிதாக விநியோகிக்கும் வகையிலான இடவசதியும் கொண்டவை. சந்தை மதிப்பில் ஒரு தள்ளுவண்டியின் விலை ரூ.90,000 வரை இருக்கலாம். கணவரை இழந்த பெண், ஆதரவற்றவர்கள், மாற்று திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்தவண்டிகளை விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உடுமலை நகராட்சியில் சாலையோர வியாபாரிகள் 800 பேர் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவருக்கும் நவீன தள்ளுவண்டிகள் ஒதுக்குமாறு மத்திய, மாநில அரசுகளிடம் கேட்டிருந்தோம்.

ஆனால் 20 வண்டிகள் மட்டுமே வரப்பெற்றுள்ளன. கூடுதல் எண்ணிக்கையில் வண்டிகளை பெற நகராட்சி தலைவர், ஆணையாளர் மூலம் ஆலோசனை நடத்தி வருகிறோம். விரைவில் பயனாளிகளுக்கு தள்ளுவண்டிகள் விநியோகிக்கப்படும், என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x