Published : 02 Aug 2023 06:14 PM
Last Updated : 02 Aug 2023 06:14 PM

நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை: மத்திய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்கவும், நிலக்கரி இறக்குமதியைக் குறைக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மக்களவையில் அவர் அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதில்: "உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதிலும், நாட்டில் அத்தியாவசியமற்ற நிலக்கரி இறக்குமதியை குறைப்பதிலும் அரசு கவனம் செலுத்துகிறது. நாட்டின் பெரும்பாலான நிலக்கரித் தேவை உள்நாட்டு உற்பத்தி மற்றும் வழங்கல் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. 2022-23 ஆம் ஆண்டில், நிலக்கரி உற்பத்தி முந்தைய ஆண்டை விட 14.77% அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில், ஜூன், 2023 வரை, உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 8.51 சதவீதம் அதிகரித்துள்ளது.

2013-14-ம் ஆண்டில் 565.765 மில்லியன் டன்னாக இருந்த நிலக்கரி உற்பத்தி 2022-23-ல் 893.190 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி சுரங்கத்திற்கான புதிய பகுதிகள் தொடர்ச்சியான ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்படுகின்றன. நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரியின் புதிய பகுதிகளை ஆய்வு செய்வதற்காக நிலக்கரி அமைச்சகத்தின் மத்திய துறை திட்டத்தின் மூலம் ஊக்குவிப்பு ஆய்வு என்ற ஒரு துணைத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதவிர, நிலக்கரி உள்ளிட்ட கனிமங்கள் குறித்த ஆய்வுகளையும் இந்திய புவியியல் ஆய்வு மையம் மேற்கொள்கிறது.

வெளிச்சந்தையில் விற்பனை செய்ய துணை நிறுவனங்களை உருவாக்குவதற்குப் பதிலாக தனிப்பட்ட நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கான எந்தவொரு திட்டமும் தற்போது பரிசீலனையில் இல்லை. தற்போது, நிலக்கரியின் தரத்தின் அடிப்படையில் நிலக்கரி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x