Published : 19 Jul 2023 02:54 PM
Last Updated : 19 Jul 2023 02:54 PM

மதுரை - யாழ்ப்பாணம் இடையே விரைவில் விமான சேவை

ராமேசுவரம்: மதுரையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு விரைவில் விமான சேவை தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக இந்தியாவிலுள்ள தனியார் விமான சேவை நிறுவனங்களுடன் இலங்கை விமான அமைச்சகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பலாலி விமான நிலையத்திலிருந்து சென்னை மற்றும் தென்னிந்திய நகரங்களுக்கு இருந்து வந்த விமான சேவை 1983-ல் உள்நாட்டுப் போரால் நிறுத்தப்பட்டது. 1990-ல் இலங்கை ராணுவத்தால் பலாலி விமான தளத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் அதிஉயர் பாதுகாப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

2009-ல் இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின்னர் பலாலி விமானத் தளத்தை இந்தியாவின் நிதியுதவியுடன் புனரமைப்பதற்காக அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. ஆனால், பலாலியில் ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் 6,000 ஏக்கர் நிலத்திலிருந்து புழம் பெயர்ந்தவர்களை மீண்டும் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு அதற்காகப் பல போராட்டங்கள் நடந்தன.

இதனால், விமானத் தளத்தைப் புனரமைக்கும் பணிகள் தாமதமானது. 2018-ம் ஆண்டுதான் பலாலி பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களை மீள் குடியேற்றம் செய்வதற்காக இலங்கை அரசு ராணுவத்தை அப்பகுதியிலிருந்து விடுவித்தது. தொடர்ந்து இந்திய நிதி உதவியுடன் பலாலி விமான நிலையம் புனரமைக்கப்பட்டு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

17.10.2019 அன்று யாழ்ப்பாணம் விமான நிலையம் திறக்கப்பட்டது. முதற்கட்டமாக சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்துக்குப் பயணிகள் விமானம் இயக்கப்பட்டு வந்தது. ஆனால், கரோனா பரவல் காரணமாக 5 மாதங்களில் அதாவது 2020 மார்ச்சில் யாழ்ப்பாணம் விமான நிலையம் மூடப்பட்டது. பின்னர் 2022 டிசம்பரில் மீண்டும் சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்துக்குப் பயணிகள் விமான சேவை `அலையன்ஸ் ஏர்' மூலம் மீண்டும் தொடங்கப்பட்டது.

வாரத்துக்கு திங்கள், செவ்வாய், வியாழன், சனி ஆகிய நான்கு நாட்களுக்கு மட்டுமே இயக்கப்பட்ட இந்த விமான சேவை, 16.07.2023 முதல் தினசரி சேவையாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், யாழ்ப்பாணம்- மதுரை இடையே விமான சேவை தொடங்குவதற்கு இலங்கை விமான சேவை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக இந்தியாவிலுள்ள தனியார் விமான சேவை நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

மேலும் இந்த விமான சேவையை வாரத்துக்கு 7 நாட்களும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை - கொழும்பு இடையே முதல் சர்வதேச விமான சேவை 2012 செப்டம்பரில் தொடங்கப்பட்டது. தற்போது மதுரையிலிருந்து தினமும் கொழும்புவுக்கு நேரடி விமான சேவையை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x