Published : 16 Jul 2023 06:41 AM
Last Updated : 16 Jul 2023 06:41 AM

கனமழையால் வர்த்தகம் பாதிப்பு - வட மாநிலம் செல்லும் 75 ஆயிரம் சரக்கு லாரிகள் நிறுத்தம்

நாமக்கல்: வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் சி.தன்ராஜ் தெரிவித்தார்.

தமிழகத்தில் இருந்து ஜவுளி, உணவுப் பொருட்கள் என பல்வேறு சரக்குகள் சாலை மார்க்கமாக லாரிகளில் வட மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதுபோல, வடமாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் பல்வேறு பொருட்கள் தமிழகம் வருகின்றன. இந்நிலையில், டெல்லி, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் சாலைப் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இருந்து செல்லும் லாரிகள் மற்றும் வட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் லாரிகள் என ஆயிரக்கணக்கான லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் சி.தன்ராஜ் கூறியதாவது: வட மாநிலங்களுக்கு செல்லும் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுஉள்ளன. தமிழகத்தில் இருந்து தேங்காய், ஜவ்வரிசி, மருந்து தயாரிக்கும் பொருட்கள் உள்ளிட்டவை வட மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. அவை, வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்துக்கு வரக்கூடிய ஆப்பிள், ஜவுளி ரகங்கள் உள்ளிட்டவையும் வட மாநிலங்களில் தேக்கமடைந்துள்ளன. இதனால் பல நூறு கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x