Published : 14 Jul 2023 07:08 PM
Last Updated : 14 Jul 2023 07:08 PM

மீண்டும் புதிய உச்சம்: 66,000-ஐ கடந்தது சென்செக்ஸ்

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமை புதிய ஏற்றத்துடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 502 புள்ளிகள் (0.77 சதவீதம்) உயர்வடைந்து 66,060 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 150 புள்ளிகள் (0.78 சதவீதம்) உயர்ந்து 19,564 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 10:26 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 141.19 புள்ளிகள் உயர்வடைந்து 65,700.08 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 24.70 புள்ளிகள் உயர்ந்து 19,438.45 ஆக இருந்தது.

அமெரிக்க சில்லறை பணவீக்கம் எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்தது உலகளாவிய சந்தைகளின் உணர்வினைத் தூண்டி சாதகமான போக்கிற்கு உதவியது. இது இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது. தகவல்தொழில்நுட்ப பங்குகளின் எழுச்சி, வங்கிப்பங்குகளின் மீட்சி காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் வார இறுதி நாள் வர்த்தகத்தை புதிய உச்சத்துடன் நிறைவு செய்தன. வர்த்தகத்தின் இடையில் சென்செக்ஸ் 66,159.79 ஆகவும், நிஃப்டி 19,595.35 ஆகவும் உச்சமடைந்தன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 502.01 புள்ளிகள் உயர்வடைந்து 66,060.90 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 150.75 புள்ளிகள் உயர்ந்து 19, 564.50 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டிசிஎஸ், டெக் மகேந்திரா, இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், விப்ரோ, டாடா ஸ்டீல், நெஸ்ட்லே இந்தியா, ஏசியன் பெயின்ட்ஸ், எல் அண்ட் டி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ பேங்க், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், இன்டஸ்இன்ட் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐடிசி,கோடாக் மகேந்திரா பேங்க், பாரதி ஏர்டெல் பங்குகள் உயர்வடைந்திருந்தன.

எம் அண்ட் எம், பவர் கிரிடு கார்ப்பரேஷன், டைட்டன் கம்பெனி, மாருதி சுசூகி, அல்ட்ரா டெக் சிமெண்ட், ஆக்ஸிஸ் பேங்க், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், என்டிபிசி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபின்சர்வ் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x