Published : 30 Jun 2023 06:12 AM
Last Updated : 30 Jun 2023 06:12 AM

ஜிஎஸ்டி வரி அமலாகி 6 ஆண்டுகள் நிறைவு - மாதம் ரூ.1.50 லட்சம் கோடி வருவாய் வசூல் சாதனை

புதுடெல்லி: இந்தியாவின் வரி நடைமுறை மிகவும் சிக்கல் மிகுந்ததாக இருந்ததையடுத்து அதனை எளிமைப்படுத்தும் விதத்தில் ஜிஎஸ்டி கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம்தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இது, இந்தியாவின் மிகப்பெரிய மறைமுக வரி சீர்த்திருத்தமாக பார்க்கப்படுகிறது.

வரும் ஜூலை 1-ம் தேதியுடன் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைப்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் ஆகிறது. இந்த ஆறு ஆண்டுகளில் ஒவ்வொரு மாதமும் இந்த புதிய வரி விதிப்பின் மூலம்ரூ.1.5 லட்சம் கோடி வரி வருவாய் உருவாக்கம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வரி ஏய்ப்பு குறைந்தது: மேலும், வரி ஏய்ப்புகளை தடுக்கும்பட்சத்தில் ஜிஎஸ்டி வருவாய் இன்னும் கூடுதலாக கிடைக்கும் என்பதே வரி வசூல் அதிகாரிகளின் கருத்தாக உள்ளது.

உள்ளீட்டு வரி கிரெடிட் (ஐடிசி)பெறுவதற்காக போலி ஆவணங்களை தாக்கல் செய்யும் நிறுவனங்களை கண்டறியும் பணியில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் அதிகாரிகள் களமிறங்கி வருகின்றனர். இதனால், ஜிஎஸ்டி அமலாக்கத்தின்போது ரூ.3 லட்சம் கோடியாக இருந்த வரி ஏய்ப்பு 2022-23-ல் ரூ.1 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.

ஏராளமான சீர்திருத்தங்கள் மேற்கொண்டு வரும்போதிலும் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிவரி விதிப்புக்குள் கொண்டு வரவேண்டும் என்ற வலியுறுத்தல்கள் இன்னும் நிலுவையில்தான் உள்ளன. ஜிஎஸ்டி கவுன்சில் இதுபோன்ற கோரிக்கைகளை பரிசீலித்து மேலும் சீர்திருத்தங்களை கொண்டு வரவேண்டும் என்பதே வரி நிபுணர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x