பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்

பணிச்சுமை காரணமாகப் பெண் காவலர் தற்கொலை முயற்சி

Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம் வரஞ்சரம் காவல் நிலையப் பெண் காவலர் பணிச்சுமை காரணமாக இன்று விஷமருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

கள்ளக்குறிச்சி மகளிர் காவல் நிலையத்தைச் சேர்ந்த பெண் காவலர் தீபா, வெளிப்பணிகளுக்காக (Out side Dutty) கடந்த 7 மாதமாக வரஞ்சரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், கள்ளக்குறிச்சி மகளிர் காவல் நிலையத்தில் இருந்து தீபாவுக்கு போன் செய்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்துக்குப் பணிக்கு வருமாறு, கடந்த 4 நாட்களாக அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், வரஞ்சரம் காவல் நிலைய அதிகாரிகள், நீதிமன்றப் பணியில் ஈடுபடுமாறு வலியுறுத்தி வந்துள்ளனர்.

இரு காவல் நிலைய போலீஸார் மாற்றி மாற்றிப் பணிகளுக்கு அழைக்கப்பட்டதால், மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த நிலையில், கள்ளக்குறிச்சி மகளிர் காவல் நிலையத்தில் பணிக்கு வரவில்லை என ஒலிவாங்கி மூலம் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த தீபா, இன்று (அக்.15) வரஞ்சரம் காவல் நிலையத்துக்குப் பணிக்குச் சென்றிருந்த நிலையில், விஷமருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த சக போலீஸார் அவரை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in