படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

ஊரடங்கில் சாலையில் சுற்றியவர்களுக்கு ஆரத்தி எடுத்த இளைஞர்கள்: மதுரையில் நூதன கரோனா விழிப்புணர்வு

Published on

மதுரையில் முழு ஊரடங்கில் சாலைகளில் தேவையில்லாமல் சென்றவர்களை கலாம் சமூக நல அறக்கட்டளை அமைப்பினர் வழிமறித்து, அவர்களுக்கு ஆரத்தி எடுத்து கையில் ராக்கி கயிறு கட்டி விநோத விழிப்புணர்வு செய்தனர்.

கரோனாவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கு அமுல்படுத்தியுள்ளது. முன் களப்பணியாளர்கள், போலீஸார் மற்றும் அனுமதி பெற்ற அரசுத் துறை ஊழியர்கள் மட்டுமே பணிக்குச் செல்வதற்காக சாலைகளில் வாகனங்களில் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், தினமும் சாலைகளில் தேவையில்லாமல் இளைஞர்கள், பொதுமக்கள் நடமாடுகின்றனர். போலீஸார் எவ்வளவோ எடுத்துக்கூறியும், விழிப்புணர்வு செய்தும் சாலைகளில் நடமாடும் மக்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில் இன்று காலை முதல் மாலை வரை மதுரை கலாம் சமூக நல அறக்கட்டளை அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் மாயகிருஷ்ணன், பாலமுருகன் ,மூர்த்தி,பாபு, செல்வராஜ் ஆகியோர் ஆரத்தி தட்டு மற்றும் ராக்கி கயிறு சகிதமாக மதுரை சாலைகளில் ஆங்காங்கே நின்று கொண்டனர். அவர்கள் அந்த வழியாக தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றியவர்களுக்கு ஆரத்தி எடுத்து சுற்றிப்போட்டனர்.

மேலும், அவர்கள் கைகளில் ராக்கி கயிறு கட்டி, தேவையில்லலாமல் வெளியே சுற்றாதீர்கள், கரோனா தொற்றுடன் வீட்டிற்கு செல்லாதீர்கள் என விழிப்புணர்வு செய்து அனுப்பி வைத்தனர்.

போலீஸாரும், இவர்களுடைய விழிப்புணர்வுக்கு ஒத்துழைப்பு செய்து அவர்களுடன் இணைந்து சென்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in