Published : 30 Aug 2014 10:18 AM
Last Updated : 30 Aug 2014 10:18 AM

நல வாரியங்கள் மூலம் தொழிலாளர்களுக்கு உதவிகள்

அரசு செயல்படுத்திவரும் நலத்திட்டங்கள், மக்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகைகள், அவற்றைப் பெறுவதற்கான வழிமுறைகள் ஆகியவற்றை துறைவாரியாகப் பார்த்து வருகிறோம்.

கட்டுமானம் மற்றும் உடல் உழைப்புத் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கும்வகையில் தமிழக அரசின் தொழிலாளர் துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறது. உதவித்தொகைகளும் வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் மூலம் இவை வழங்கப்படுகின்றன. இதுகுறித்து ஈரோடு மாவட்ட தொழிலாளர் நல அலுவலர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பி.முனியன் விளக்குகிறார்..

தமிழகத்தில் எத்தனை நல வாரியங்கள் உள்ளன?

கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம், உடல் உழைப்புத் தொழிலாளர் நலவாரியம், அமைப்புசாரா ஓட்டுநர்கள் நலவாரியம், சலவைத் தொழிலாளர் நலவாரியம், முடி திருத்துவோர் நலவாரியம், கைவினைத் தொழிலாளர்கள் நலவாரியம், பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியம் என்பது உட்பட தமிழகத்தில் 17 நல வாரியங்கள் செயல்படுகின்றன.

கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்துக்குள் எத்தனை வகையான தொழில் உள்ளன?

கல் உடைப்போர், மேஸ்திரி, கொத்தனார், தச்சர், பெயின்டர், கம்பி வளைப்பவர், ஃபிட்டர், சாலை குழாய் பதிப்புப் பணியாளர், எலக்ட்ரீஷியன், மெக்கானிக், கிணறு தோண்டுபவர், கூலியாள், காவலாளி, சாலைப் பணியாளர், செங்கல் சூளைத் தொழிலாளர் உட்பட 38 வகையான தொழிலாளர்கள் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் உள்ளனர். இவர்களுக்கு தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் மூலம் திருமணம், மகப்பேறு, கல்வி உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

உடல் உழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியம் உட்பட இதர நலவாரியங்களில் என்னென்ன தொழில்கள் வருகின்றன?

சுமை ஏற்றுதல், இறக்குதல், அடுக்குதல், சிப்பம் கட்டுதல், எடைபோடுதல், அளவிடுதல், ரயில்வே நிர்வாகத்தால் பணி அமர்த்தப்பட்ட உடல் உழைப்புத் தொழிலாளர்கள், உப்பள வேலை, மரம், கயிறு தொழில், உணவு சமைத்தல், தேங்காய் உரித்தல், காஸ் சிலிண்டர் விநியோகம் செய்தல், ஆட்டோ, டாக்ஸி, வேன், லாரி மற்றும் அரசுத் துறை நீங்கலாக பேருந்து ஓட்டுதல் உட்பட 60 தொழில்கள் நலவாரியங்களின் கீழ் வருகின்றன. இவர்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

நல வாரியத்தில் பதிவு செய்வதற்கான வயது வரம்பு, கட்டணம் என்ன?

தொழிலாளியின் வயது 18 முதல் 60-க்குள் இருக்க வேண்டும். பதிவுக் கட்டணம் கிடையாது. புகைப்படத்தை விண்ணப்பத்தில் ஒட்டவேண்டும். மற்றொரு புகைப்படத்தை ஓர் உறையில் வைத்து, அதை விண்ணப்பத்துடன் இணைத்து அந்தந்த மாவட்ட தொழிலாளர் நல அலுவலரிடம் (சமூக பாதுகாப்பு) வழங்கி ஒப்புதல் சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்யவேண்டியது அவசியம்.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x