Last Updated : 09 Oct, 2024 03:11 PM

 

Published : 09 Oct 2024 03:11 PM
Last Updated : 09 Oct 2024 03:11 PM

ஜாக்குலினின் ‘புதிய’ முகமும், எதிர்பார்க்காத ட்விஸ்ட்டும் | Bigg Boss 8 Analysis

முந்தைய சீசன்களிலெல்லாம் போட்டியாளர்களுக்குள் சண்டை பிடிக்க குறைந்தது ஒரு வாரம் ஆகும். ஆனால், இந்த முறை முதல் நாளிலேயே 24 மணி எலிமினேஷன் என்று ஒன்றை கொண்டு வந்து ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டார். ஒரு போட்டியாளரின் செயல்பாடுகளை, அவரது பாசிட்டிவ் நெகட்டிவ் பண்புகளை தெரிந்துகொள்ளவே ஒரு வாரம் போதாது. அப்படி இருக்கையில் எதற்காக இப்படி ஒரு எலிமினேஷன். ஒரே நாளில் வெளியேற்ற எதற்காக ஒரு போட்டியாளரை கொண்டு வரவேண்டும் என்ற பல விவாதங்கள் இணையத்தில் சூடாக நடந்து வருகிறது.

முதல் நாளிலேயே நிகழ்ச்சி விறுவிறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பாய்ஸ் vs கேர்ள்ஸ் என்ற ஒரு விதிமுறையும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஆண்கள் டீம் ஒரு பக்கமும் பெண்கள் டீம் ஒரு பக்கம் பிரிந்து அடித்துக் கொள்வார்கள் என்பது பிக்பாஸின் திட்டமாக இருந்திருக்கலாம். ஆனால் திடீர் திருப்பமாக பெண்கள் அணிக்குள்ளேயே உட்கட்சி பூசல் வெடித்தது யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட். இதில் இருக்கும் உளவியல் உண்மையை நாம் சற்று கூர்ந்து கவனிக்க வேண்டும்.

ஆண்கள் டீமை பொறுத்தவரை அவர்களுக்குள் எந்த பூசல்களும் எழுவதே இல்லை. ஒருவர் ஒரு கருத்து சொன்னால் அது சரியாக இருக்கும் பட்சத்தில் கிட்டத்தட்ட அனைவருமே அதை முழுமையாக ஏற்றுக் கொண்டுவிடுகின்றனர். அவர்கள் ஒரு விஷயத்தில் முடிவு எடுப்பதிலும் அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை. இதை இந்த சீசன் மட்டுமல்லாது இதற்கு முந்தைய சீசன்களிலுமே பார்த்திருக்க முடியும். ஓரிரு சீசன்கள் தவிர மற்ற எந்த சீசனிலும் ஆண்களுக்குள் பெரிய சண்டைகள் எதுவும் வந்ததில்லை.

ஆனால், பெண்கள் டீம் என்று ஒன்று தனியாக பிரிக்கப்பட்டதிலிருந்தே ஆளுக்கு ஒரு கருத்து கூறி வாக்குவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருவர் கூறும் கருத்து சரியாக இருந்தால் கூட அதை சிலர் ஏற்றுக் கொள்வதில்லை. ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பவர்களைக் கூட பேசி பேசி மாற்றிவிடுகின்றனர். நேற்றைய எபிசோட் முழுக்கவே இந்த வாக்குவாதங்கள் தொடர்ந்தது.

குறிப்பாக ஆண்கள் டீமிலிருந்து ஒருவர் பெண்கள் அணிக்கும், பெண்கள் டீமிலிருந்து ஒருவர் ஆண்கள் அணிக்கும் செல்லவேண்டும் என்பது பிக்பாஸின் உத்தரவு. இந்த அறிவிப்பு வந்த ஒரு சில நிமிடங்களிலேயே முத்துக்குமரன் பெண்கள் அணிக்கு செல்வார் என்று ஆண்கள் முடிவெடுத்து விட்டனர். ஆனால் பெண்கள் அணியிலோ ஜாக்குலின் செல்வது சுனிதாவுக்கு பிடிக்கவில்லை, தர்ஷா செல்வது ஜாக்குலினுக்கு பிடிக்கவில்லை, இவர்கள் இருவரும் செல்வது மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை. நிலைமை இப்படியாக வெகுநேரம் நீடித்தது. இடையிடையே சிலர் கண்ணீர் கூட வடித்தனர்.

தான் கேமை மிகவும் சுவாரஸ்யமாக ஆடுவதாக நினைத்துக் கொண்டு வேண்டுமென்றே பெண்கள் டீமின் அமைதியை ஜாக்குலின் கெடுக்கிறாரோ என்று தோன்றுகிறது. அதை வாய்விட்டு அவரிடமே சுனிதாவும் சொல்லிவிட்டார். ஆனாலும் முதல் நாளிலிருந்தே யார் என்ன கருத்து சொன்னாலும் அதை ஏற்கவே கூடாது என்று முன்கூட்டியே முடிவு செய்து வந்தது போல செயல்படுகிறார் ஜாக்குலின். வெளியே தொகுப்பாளராக கலகலப்பாக பார்த்த ஜாக்குலினின் இந்த ‘புதிய’ முகம் சற்றே ஆச்சர்யத்தை தருகிறது. இதுதான் அவரது நிஜ முகமா அல்லது நிகழ்ச்சிக்காக அணிந்து கொண்ட முகமூடியா என்பது இன்னும் சில தினங்களிலேயே தெரியவரும்.

வெறும் சண்டைகளை மட்டுமே மூட்டிவிடும் நோக்கில் டாஸ்க்குகளை கொடுக்காமல் நிகழ்ச்சியை சற்று சுவாரஸ்யப்படுத்தும்படியான டாஸ்க்குகளை கொடுத்தால் இந்த சீசன் தப்பிக்கலாம். இல்லையென்றால் ஒரு சில வாரங்களிலியே வெறும் சண்டைகள் சலிப்பை தந்துவிடும். ஆவண செய்வாரா பிக்பாஸ்?

முந்தைய அத்தியாயம்: இயல்புத் தன்மை + கலாய்ப்பு... தெறிக்கவிட்ட விஜய் சேதுபதி | Bigg Boss 8 Analysis

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x