Last Updated : 15 Jun, 2024 12:22 AM

 

Published : 15 Jun 2024 12:22 AM
Last Updated : 15 Jun 2024 12:22 AM

முதியோரை அவமதிப்பது ஏன்? | ஜூன் 15 - உலக முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினம்

கோப்புப்படம்

பெரியவர்களுக்கு தற்பொழுது வீட்டில் உரிய மரியாதை கிடைப்பதில்லை. நகர்புறத்தில் சில குடும்பங்களில் முதியவர்கள் அவமதிக்கப்படுகிறார்கள். இது இலை மறை காய் மறையாக பல குடும்பங்களில் நடந்து வருகிறது. ஆனால் கிராமத்தில் இன்னமும் பெரியவர்கள் மதிக்கப்படுகிறார்கள்.

முதியவர்களின் அதிகமான இளைஞர்களிடமிருந்து எதிர்பார்ப்பும், இளைய தலைமுறையினரின் படிப்பறிவும், பணப்புழக்கமுமே தலைமுறை இடைவெளிக்கு காரணமாகிறது. இதைத் தவிர வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள இளைய சமுதாயத்தினரின் வறுமை காரணம், மது மற்றும் போதை பொருட்கள் போன்றவற்றாலும் முதியோரை மதிக்காத ஒருநிலை ஏற்பட காரணமாகிறது. முதியோர் அவமதிப்பு என்பது வயதானவர்களுக்கு ஊறு அல்லது மன இறுக்கத்தை ஏற்படுத்தும் செயலாகும். உதாரணம்:

அவமதிப்புகள் பலவிதம்

  • மனம் சார்ந்தது: வெளியில் கூட்டுக் குடும்பம் என்று சொல்லிக் கொண்டு வீட்டில் பெரியவர்களிடம் பேசாமல் மனதளவில் காயப்படுத்துதல்.
  • வாய் மொழி சார்ந்தது: வீட்டில் இருக்கும் முதியவர்களை அடிக்கடி திட்டுவது அல்லது சண்டை போடுவது.
  • பொருள் சார்ந்தது : காசோலையில் பொய் கையெழுத்திட்டு பணம் எடுப்பது. உயில் எழுதும்படி வற்புறுத்துதல்.
  • உடல் சார்ந்தது : மது போதையில் முதியோரிடம் பணம் கேட்டு துன்புறுத்துவது மற்றும் அடிப்பது.

முதுமையில் யார் எல்லாம் அவமதிக்கப்படுகிறார்கள்?

  • எந்த வருமானமோ, சொத்தோ இல்லாமல் இளைஞர்களை சார்ந்திருப்பவர்கள்
  • ஒரே குழந்தையைப் பெற்ற முதியவர்கள்
  • நாள்பட்ட நோயால் படுத்த படுக்கையில் கிடக்கும் முதியவர்கள், உ.ம். : மறதி நோய், பக்கவாதம், உதறுவாதம்
  • தங்களுடைய எல்லா தேவைகளுக்கும் வீட்டில் இருப்பவர்களின் உதவியை நாடும் முதியவர்கள்.
  • பணம் பெரியவர்களிடமிருந்து மாதாமாதம் வரும் வரை அவர்கள் மதிக்கப்படுகிறார்கள். அது நின்றதும் அவரின் நிலை ஒரு ஆறாம் விரலாக ஆகிவிடுகிறது.

முதியவர்கள் யாரால் அவமதிக்கப்படுகிறார்கள்?

  • முதியவர் வீட்டில் தொடர்ந்து நோய்வாய்ப்பட்டு இருக்கும் பொழுது இடவசதி மற்றும் நிதி வசதி குறைவினால் அவமதிக்கப்படுகிறார்.
  • முதியவர்களை தொடர்ந்து கவனித்துக் கொள்ளும் போது அவர்களைப் பார்த்து கொள்ளும் உறவினர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். நிதி வசதியும் குறையும். சில சமயங்களில் செய்யும் தொழிலில் இழப்பும் ஏற்படும். இதன் விளைவாக முதியவர்களிடம் மன இறுக்கத்தை உண்டாக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள்.
  • மது மற்றும் மருந்துக்கு அடிமை ஆகி வரும் இளைஞர்கள்.
  • முதியவர்களின் சொத்துக்காக ஆசைப்பட்டு பொய்யாக முதியவர்களை கவனித்து கொள்ளும் உறவினர்கள்.
  • மனதளவிலும் உடலளவிலும் மற்றும் பலவகையான அவமதிப்புக்கு ஆளாகும் முதியவர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள குறைபாடுகளை வெளியே சொல்ல தயங்குவார்கள். ஏனெனில் முதியவர்கள் இதைப்பற்றி மற்றவர்களிடம் தெரிவித்தால் முதியவர்கள் மேலும், மேலும் அவமதிப்புக்கு உள்ளாவார்கள். ஆகையால் இவர்கள் படும் இன்னலை குடும்ப மருத்துவர், நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்களால் மட்டுமே கண்டறிய முடியும்.

என்ன தான் தீர்வு?

  • வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுடன் சமூக நலத் துறையின் மூலமாகவும் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் மூலமாகவும் நேரடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும். முடிந்தளவிற்கு அவர்களுக்கு வேலை பெற்றத் தர உதவ வேண்டும்.
  • மேலும் விருப்பமுள்ள படித்த இளைஞர்களுக்கு வங்கியின் மூலம் நிதி உதவி பெற உதவ வேண்டும்.
  • மதுப் பழக்கம் உள்ள இளைஞர்களுக்கு, மருத்துவமனைக்குச் சென்று தக்க சிகிச்சை பெற உதவ வேண்டும். குடிப்பழக்கத்தை கைவிட உளவியல் நிபுணர் மூலம் இளைஞர்களுக்கு இலவச ஆலோசனை வழங்க வேண்டும்.
  • முதியோரை அவமதித்தல் நிதி வசதி படைத்த பணக்காரக் குடும்பங்களிலும் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. இதைத் தவிர்க்க முதியவர்கள், நல்ல குடும்ப சூழ்நிலையிருக்கும் பொழுதே உயில் எழுதி வைத்துவிடுவது நல்லது.
  • மேலும் பொய் கையெழுத்து யார், யார் இடுவார்கள் என்பதை ஓரளவிற்கு தெரிந்து கொண்டு வங்கி மேலாளருக்கு இதுபற்றி தெரிவித்து விட்டால் மேலாளர் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவார்.
  • நோயுற்று தொடர் சிகிச்சை பெறும் முதியவர்களுக்கு மாதத்திற்கு ஒருமுறை மருந்தை இலவசமாகக் இல்லம் சென்று அரசாங்கம் கொடுக்கலாம் மற்றும் முதியவர்களுக்குத் தேவையான கண் கண்ணாடி, காது கேட்கும் கருவி, பல் செட் மற்றும் கைத்தடி போன்ற உபகரணங்களை இலவசமாக கொடுக்க அரசு முன்வரலாம்.
  • முதியோர்களை மதித்து நடக்கும் இளைஞர்களைப் பாராட்டி தேசிய அளவில் ‘பத்மா விருதுக்கு’ நிகரான விருதினை வழங்க ஏற்பாடு செய்யலாம். இது
  • இளைஞர்களிடையே முதியோரை மதிப்பது பற்றிய விழிப்புணர்வையூட்ட பெரிதும் உதவும்.
  • "முதியோரை மதித்தல்’ பற்றிய கட்டுரைகள் பள்ளி பாட நூலில் இடம் பெறச் செய்யலாம்.
  • ஐக்கிய நாடுகள் சபை, முதியோர்களின் கொடுமை பற்றிய விழிப்புணர்வை எற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15 ந்தேதியை "முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்ச்சி ஊட்டும்’ நாளாக 2006 ஆம் ஆண்டிலிருந்து அனுசரிக்கப்படுகிறது.

எல்லா பள்ளி மாணவ - மாணவியர்கள் "முதியோர் அவமதித்தலை’ எதிர்த்து ஜூன் 15-ம் தேதி உறுதிமொழியை எடுத்துக் கொள்ளலாம். உறுதிமொழியை வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் எடுத்துக் கொண்டால் போதாது. ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி அனைத்து பள்ளி மாணவ - மாணவியர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உறுதிமொழியை தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

‘ஹெல்பேஜ் இந்தியா’ எனும் தொண்டு நிறுவனம் 2014 லில் நடத்திய கணக்கெடுப்பில் சுமார் 32 சதவீத முதியவர்கள் இளைய சமுதாயத்தினரால் அவமதிக்கப்படுகிறார்கள் அல்லது தக்க மரியாதை இல்லாமல் நடத்தப்படுகிறார்கள். இதைவிட இன்னமும் அதிர்ச்சி ஊட்டும் செய்தி, 56 சதவீத முதியவர்கள் தனது மகன்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள் மற்றும் 23 சதவீத முதியவர்கள் தனது மருமகள்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

ஏதோ ஒரு வீட்டில் வயதானவர்களை சரியாக கவனிப்பதில்லை அல்லது புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று எண்ணிவிடக்கூடாது. அது போலவே நம் வீட்டில் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம். ஆகையால் இது ஒரு வீட்டுப் பிரச்சனையாக யாரும் எண்ணக்கூடாது. இதுவே விரைவில் ஒரு சமுதாயப் பிரச்சினையாக உருவெடுத்தாலும் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை. முதியோர்களை மதிப்போம். அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வோம். அவர்கள் நிம்மதியாக, கௌரவமாக வாழ எல்லோரும் துணை போவோம்.

இளைய சமுதாயத்தினர் இடமிருந்து முதியோரை மதிக்கும் பணியை ஒரு சில வாரங்களிலோ அல்லது மாதங்களிலோ மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது. மேற்கண்ட வழிமுறைகளை தொடர்ந்து பல ஆண்டுகள் கடைப்பிடிப்பதினால் வருங்கால சமுதாயம் ‘முதியோரை மதிக்கும்’ சமுதாயமாக மாறும் என்பது நிச்சயம்!

உறுதிமொழி: ‘முதியோருக்கு எதிராக இழைக்கப்படும் அனைத்து வகை கொடுமைகளையும் - இவை வாய்மொழியாகவோ. வன்முறை மூலமாகவோ, பொருளாதார ரீதியாகவோ - எந்த உருவில் வந்தாலும் - அவற்றைக் களைவதற்காக - முளையிலேயே கண்டுபிடித்துத் தலையிட்டுத் தடுக்கவும், அறவே நீக்கவும், என் சொந்த முயற்சியாலும், தேவைப்பட்டால் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களின் துணையோடும் பாடுபடுவேன்.

மேலும், அவர்களுடைய அனைத்து வகையான தேவைகளுக்கும் - அதாவது உடல் வளத்துக்கும், பாதுகாப்புக்கும், அன்பு மற்றும் மனவளத்துக்கும், மதிப்பிற்கும், மரியாதைக்கும், உரிய அங்கீகாரத்துக்கும் இடையூறு ஏற்பட்டால் அவற்றைத் தடுத்து பாதுகாப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன்.’

- பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன், முதியோர் நல மருத்துவர், சென்னை

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x