Last Updated : 13 Oct, 2023 02:43 PM

 

Published : 13 Oct 2023 02:43 PM
Last Updated : 13 Oct 2023 02:43 PM

Bigg Boss 7 Analysis 7: பிரைவசி கேள்விகளை எழுப்புகிறதா ‘லவ் கன்டென்ட்'?

முந்தைய சீசனில் ‘லவ் கன்டென்ட்' இல்லாத குறையை நிவர்த்தி செய்வதற்காகவே பிக்பாஸ் குழுவால் திட்டமிட்டு அனுப்பப்பட்ட ரவீனா - மணி சந்திரா இருவருக்கும் இடையிலான ‘நட்பு’ மெல்ல கேள்விக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், 11-ஆம் நாளில் கொஞ்சம் அதிகமாகவே இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டது.

ஆடுவது, பாடுவது, கொஞ்சி சிரிப்பது என காலேஜ் டூர் வந்ததுபோல சுற்றிக் கொண்டிருந்த ரவீனாவிடம் வான்டட் ஆக ஒவ்வொருவரும் போய் அவருக்கும் மணிக்கும் இருப்பது காதலா அல்லது நட்பா என்று கேட்பது அவருக்கு பிடிக்கவில்லை. மாயா இந்த விஷயத்தில் அதீத ஆர்வம் காட்டுவது குறித்து ரவீனா, மணி, விசித்ரா மூவரும் சீரியசாக பேசிக் கொண்டிருந்தனர். முந்தைய சீசன்களில் ஜோடிகளாக இருந்தவர்களை பார்க்கும்போது தனக்கு எரிச்சலாக இருக்கும் என்றும், ஆனால் உங்களை பார்த்தால் எனக்கு அப்படி தோன்றவில்லை என்று விசித்ரா சொன்னதும் இருவரும் வெட்கத்தில் நெளிந்தனர்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக குசுகுசுவென பேசிக் கொண்டிருந்த ரவீனா - மணி விஷயத்தை கூட்டத்தில் கட்டுச்சோத்தை அவிழ்ப்பது போல போட்டு உடைத்தார் பிரதீப். ”என்ன ரெண்டு பேரும் லவ் கன்டென்ட் கொடுக்குறீங்களா?” என்று நக்கலான தொனியில் கேட்டுக்கொண்டே இருந்தார். அவர்கள் இருவரும் இது குறித்து கேமரா முன்பு பேச தயங்குகிறார்கள் என்று தெரிந்தபின்பாவது அவர் விட்டிருக்கலாம். ஆனால், திரும்ப திரும்ப ஒரு சென்சிட்டிவ் ஆன விஷயத்தை பொதுவில் கேள்விக்கு உட்படுத்துவது நாகரிகம் அல்ல. தங்களுக்கு இடையில் இருப்பது என்ன வகையான உறவு என்பது குறித்த தெள்வி அவர்கள் இருவருக்குமே இல்லை என்பதை அவர்களது இன்றைய உரையாடல்களில் இருந்தே தெரிந்து கொள்ள முடிந்தது.

அத்தகைய சூழலில் இப்படி துருவித் துருவி பிரதீப் கேட்டது ரசிக்கும்படி இல்லை. இருவரும் சென்று ‘இதுகுறித்து இனி பேசவே வேண்டாம்’ என்று ஸ்ட்ரிக்ட் ஆக சொன்ன பிறகே அமைதி ஆனார் பிரதீப். அடுத்து வந்த ஐஷு, இருவரையும் விசாரணைக் கைதிகளைப் போல நிற்கவைத்து விசாரித்துக் கொண்டிருந்தவர், ‘எது செஞ்சாலும் சொல்லிட்டு செய்ங்க’ என்று ரூல்ஸ் போட்டார்.

ஸ்மால் பாஸின் அறிவுறுத்தலின்படி பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரையும் பற்றி ஒரு பாடல் எழுதியது ஸ்மால் பாஸ் குழு. பிக் பாஸ் வீட்டு உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் பற்றி ஆளுக்கு ஒரு பாயின்ட் எடுத்து வைக்க, ரவீனா - மணி இருவரையும் இணைத்து ஒரு வரியை அதில் மாயாவும், விஷ்ணுவும் சேர்த்தனர். இதற்கு ஆட்சேபனை தெரிவித்த பிரதீப், ‘இந்த விஷயம் குறித்து மணி பேசவேண்டாம் என்று சொல்லிவிட்டான். எனவே நான் பேசமாட்டேன்” என்று கூறி அதிலிருந்து ஒதுங்கிக் கொண்டார். வழக்கமாக எப்போதுமே ‘கன்டென்ட்’க்காக என்ன செய்யலாம்? என்று யோசித்துக் கொண்டிருக்கும் பிரதீப் இப்படி பேசியது ஆச்சரியத்தை தந்தது. ஆனால், அதற்கு பதிலளித்த மாயா, ‘அவன் சொன்னான் என்பதற்காக என்னால் கேட்க முடியாது’ என்று கூறி சொன்னபடியே அந்தப் பாடலில் ரவீனா - மணி குறித்த வரிகளை சேர்த்தார்.

பிக் பாஸ் வீட்டுக்கு வந்த முதல் நாளில் இருந்தே ஆடை உரிமை, பாலின சமத்துவம், இலக்கிய பரிச்சயங்கள் குறித்து எல்லாம் பேசி வரும் மாயாவுக்கு, அடுத்தவரின் தனிப்பட்ட விஷயத்தில் தலையிடுவது நாகரிகம் அல்ல என்ற அடிப்படை விஷயம் கூட தெரியாமல் போனதுதான் சோகம்.

அடுத்தபடியாக, ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்தவர்கள் சப்பை காரணங்களைக் கூறி படு அபத்தமான ஒரு போராட்டத்தை முன்னெடுத்தது பிக்பாஸே எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட். போட்டியாளர்களுக்குள் சண்டை மூட்டுவதற்காக விதவிதமாக டாஸ்க் யோசிக்கும் பிக் பாஸ் டீமே ஒருகணம் ‘யார்றா இவனுங்க?’ என்று ஜெர்க் ஆகும் அளவுக்கு அவர்களின் செயல்பாடு இருந்தது. ‘கிச்சனை சுத்தமாக வைத்துக் கொள்ளமாட்டீர்களா?’ என்று விசித்ரா கேட்டதை பிடித்துக் கொண்டு கூடுதலாக ஒரு ஆள் இல்லையென்றால் சமைக்கவே மாட்டோம் என்று அடம்பிடித்தது ஸ்மால் பாஸ் அணி. அதுமட்டுமில்லாமல் அவர்கள் பக்கம் இருந்த பழங்கள் உள்ளிட்ட சில பொருட்களை பதுக்கி வேறு வைத்தனர். இதற்கு பதிலடி கொடுக்கிறேன் என்ற பெயரில் தங்கள் பக்கம் இருந்த சிறுதீனிகளையும், அத்தியாவசிய பொருட்களை பிக்பாஸ் அணி பதுக்கியது. இத்தனை சீசன்களிலும் உணவுக்காக இப்படி ஓர் அபத்தமான சண்டையை இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி பார்த்திருக்காது.

இந்த பஞ்சாயத்து விடாமல் நீண்டு கொண்டே சென்றது. யுகேந்திரன் - விஷ்ணு, விசித்ரா விஷ்ணு, மாயா - விசித்ரா என மாறி மாறி சென்றுகொண்டே இருந்த வாக்குவாதம். கடைசியாக ஜோவிகா - பிரதீப்பிடம் வந்தது. “சமைக்குறதுதான் உன் வேலை... அதுக்காகதான் அந்த வீட்டுக்கு நீ போயிருக்க” என்று ஜோவிகா சொன்னதும், “நான் என்ன அடிமையா?” என்று பிரதீப் திருப்பி கேட்க, இரண்டு பக்கமும் சிக்கிய மத்தளமாய் பரிதாபமாக நின்றுகொண்டிருந்தார் வீட்டின் தலைவர் சரவணன். கடைசியாக ஸ்மால் பாஸ் அணி கேட்ட அந்த ஒரு கூடுதல் ஆளாக நானே வருகிறேன் என்று சரவணன் களத்தில் இறங்கியபிறகே வீடு இயல்பு நிலைக்கு திரும்பியது.

ரவீனா - மணி விவகாரம் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு ஒரு கட்டத்தில் அவர்கள் இருவருக்குமே சண்டையில் போய் முடிந்தது. ஒருவழியாக இந்த சீசனில் லவ் கன்டென்ட் எதிர்பார்த்த பிக் பாஸ் டீமுக்கு கூடுதல் கன்டென்ட் கிடைத்ததை அவர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

முந்தைய அத்தியாயம்: ‘தகுதி’ குறித்த பிரதீப்பின் பேச்சும், வெடித்துச் சிதறிய நிக்சனும்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x