Last Updated : 11 Oct, 2023 01:25 PM

 

Published : 11 Oct 2023 01:25 PM
Last Updated : 11 Oct 2023 01:25 PM

Bigg Boss 7 Analysis 5: மாயாவின் மன்னிப்பும்... ஸ்ட்ராட்டஜியை கைவிட்ட பிரதீப்பின் பெருந்தன்மையும்...

முந்தைய பிக்பாஸ் சீசன்களை ‘உன்னிப்பாக’ கவனித்த யாரோதான் எதற்கெடுத்தாலும் எல்லாரிடமும் சண்டை போடு என்று விஷ்ணுவிடமும், யார் கூடவும் சேராதே என்று பிரதீப்பிடம் சொல்லி அனுப்பியிருப்பார்கள் போலிருக்கிறது. இருவருமே இந்த இரண்டு விஷயங்களில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். அதே போல பவா செல்லதுரை வெளியேறியது, போட்டியாளர்கள் மத்தியில் எந்த சலனத்தையும் ஏற்படுத்தியதாக தெரியவில்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது நாளில், ஸ்மால் பாஸ் ஹவுஸுக்குள் அனுப்பப்பட்ட புதியவர்கள், ஆளுக்கு ஒரு உணவு கேட்ட பிக் பாஸ் வீட்டு போட்டியாளர்களை வம்பிழுக்கும் விதமாக பாட்டு பாடி வெறுப்பேற்ற, இந்த விவகாரத்தில் ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களிடமிருந்தே விலகி நின்றார் பிரதீப். “இவர்கள் நல்ல மனிதர்களாக தெரியவில்லை. உங்களையும் ஆயிஷாவையும் தவிர வேறு யாருடனும் நான் சேர்ந்து ஆட விரும்பவில்லை” என்று கூல் சுரேஷிடம் புலம்பிக் கொண்டிருந்தார். இதையே சாக்காக வைத்து பிரதீப்பிடம் வழக்கம்போல வம்பிழுத்தார் விஷ்ணு. ‘வாங்க.. போங்க’ என்று தொடங்கி ‘வா.. போ’-வில் முடிந்தது வாக்குவாதம்.

தன் அம்மா குறித்து தப்பா பேசியவர் என்று மாயா குறித்து கூல் சுரேஷிடம் பிரதீப் சொன்ன விஷயம், எப்படியோ மாயா காதுக்கு சென்றுவிட, அது குறித்து காலையிலேயே பூர்ணிமாவிடம் பேசினார். டிவியில் ஒளிபரப்பாகாத அந்த விவகாரம் குறித்து பூடகமாக கமல் கூறியதை “ஒன்று ஓபனாக சொல்லணும்.. இல்லன்னா சொல்லாம விட்டிருக்கணும்” என்று விமர்சித்தார் பூர்ணிமா. “இது போன்ற சென்சிடிவ் ஆன விஷயத்துக்கு சிரிப்பவர்கள் நாம் அல்ல, கண்டிப்பாக கூல் சுரேஷும், விஷ்ணுவும்தான் சிரித்திருப்பார்கள்” என்று தங்கள் பக்க நியாயத்தை இருவரும் முன்வைத்தனர்.

முந்தைய நாள் கன்ஃபெசன் அறையில் வீட்டுக்குப் போக வேண்டும் என்று அடம்பிடித்த மாயா, தற்போது இந்த வீட்டில் வாழவே ஆரம்பித்து விட்டேன் என்று பூர்ணிமாவிடம் சொன்னது மட்டுமின்றி சக போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு முறை வைத்துக் கொண்டிருந்தது பார்க்க சுவாரஸ்யமாக இருந்தது.

தன் அம்மா குறித்து தவறாக பேசியதாக பிரதீப் குற்றம் சாட்டிய விவகாரத்தை அவரிடமே நேருக்கு நேராக கேட்டுக் கொண்டிருந்தார் மாயா. தான் அவ்வாறு பேசி சிரிக்கவில்லை என்று தன் தாயின் மீது ஆணையிட்டு கூறினார். குறும்படம் போட்டு அதில் தான் சிரித்தது போல வந்தால் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கிறேன் என்றும் பேசினார். தன்னுடைய பக்குவமான பேச்சின் மூலம் கடந்த ஒரு வாரத்தில் தன் மீது ஏற்பட்ட நெகட்டிவ் பிம்பத்தை துடைப்பதற்கான முயற்சியில் மாயா ஈடுபட்டிருப்பது தெரிகிறது. வழக்கம்போல எந்தவொரு செயலிலும் ‘ஸ்ட்ராட்டஜி’-ஐ கடைபிடிக்கும் பிரதீப்பும் பெருந்தன்மையுடன் அதனை ஏற்றுக் கொண்டது பாராட்டத்தக்கது. பக்கத்தில் இருந்து இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த ஐஷு, ‘நீங்க ரெண்டும் பேரும் சண்டை போட்டாதான் நல்லாருக்கும்’ என்று கூறியது ஆடியன்ஸ் மற்றும் பிக் பாஸின் மைண்ட் வாய்ஸை பிரதிபலிப்பதாக இருந்தது.

நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக தனது கதைகளின் வாயிலாக ‘கன்டென்ட்’ தந்து கொண்டிருந்த பவா செல்லதுரை வெளியேறிய பிறகு, பிக்பாஸ் வீட்டுக்குள் சிறிய சுணக்கம் இருப்பதை உணரமுடிகிறது. தாங்களாகவே சண்டை போட்டு கன்டென்ட் தருவார்கள் என்று நம்பிக் கொண்டிருந்ததாலோ என்னவோ பிக் பாஸ் டீமும் முந்தைய சீசன்களைப் போல சுவாரஸ்யமான டாஸ்க் எதையும் இதுவரை தரவில்லை. முதல் வாரத்திலேயே நிகழும் ‘லேட் என்ட்ரி’ கோட்டாவிலும் புதிய போட்டியாளர்கள் யாரும் வரவில்லை. வரும் தினங்களில் இது இப்படியே தொடர்கிறதா? இல்லை ஏதேனும் சுவாரஸ்யமான மாற்றம் நிகழ்கிறதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

முந்தைய அத்தியாயம்: வெளியேற்றப்பட்ட அனன்யாவும், ‘வெளியேறிய’ பவாவும்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x