Last Updated : 13 Apr, 2024 07:33 PM

 

Published : 13 Apr 2024 07:33 PM
Last Updated : 13 Apr 2024 07:33 PM

மீனம் ராசிக்கு தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் | குரோதி வருடம் எப்படி? - ஏப்.14, 2024 முதல் ஏப்.13, 2025 வரை

மீனம் மேல் தட்டு மக்களை விட குடிசையில் வாழ்பவர் களுக்காக அதிகம் யோசிப்பவர்களே! குரோதி வருடம் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் பிறப்பதால் சின்ன சின்ன கனவுகளெல்லாம் நனவாகும். மாதக் கணக்கில் தள்ளிப் போன காரியங்களெல்லாம் விரைந்து முடிவடையும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அமைப்பது, அறை கட்டுவது, வீட்டுக்கு வர்ணம் பூசுவது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும்.

தாயாரின் உடல் நிலை சீராகும். ஊர் எல்லையில் வாங்கியிருந்த இடத்தை விற்று சிலர் நகரத்தில் வீடு வாங்குவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். தாய்வழி சொத்து கைக்கு வரும்.

இந்தப் புத்தாண்டு சுக்ரன் மற்றும் புதன் ஆகிய கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் நேரத்தில் பிறப்பதால் உங்கள் செயலில் வேகம் கூடும். மனதில் அமைதி உண்டாகும். பேச்சில் கனிவு பிறக்கும். பிள்ளைகளுக்கு சொத்து சேர்க்க வேண்டும் என நினைப்பீர்கள். கலை, இலக்கியம் இவற்றில் மனம் ஈடுபாடு கொள்ளும். சிலரின் படைப்புகள் பத்திரிகையில் இடம் பெற வாய்ப்பிருக்கிறது. நீண்ட காலமாக பார்க்க வேண்டுமென்று நினைத்திருந்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். உடன்பிறந்த வர்களின் கோபம் குறையும்.

30.04.2024 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு தனஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பணவரவு உண்டு. கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உடல் நலம் சீராகும். சோர்ந்திருந்த நீங்கள் இனி உற்சாகமடைவீர்கள். கல்வியாளர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். நீண்ட நாட்களாக போக நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். தந்தையாருடன் இருந்த மோதல்கள் விலகும். அவரின் ஆரோக்கியமும் சீராகும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும்.

01.05.2024 முதல் வருடம் முடியும் வரை குரு ராசிக்கு 3-ல் அமர்வதால் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கப் பாருங்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். இளைய சகோதரருடன் உரசல் போக்கு வந்து நீங்கும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். சொத்து வாங்கும் போது பட்டா, வில்லங்க சான்றிதழ், தாய் பத்திரத்தையெல்லாம் சரி பார்த்து வாங்குவது நல்லது. வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்க வேண்டாம். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். ஊர் பொதுக் காரியங்களில் அத்துமீறி மூக்கை நுழைக்க வேண்டாம்.

இந்த வருடம் முழுவதுமாக சனி 12-ல் மறைந்து ஏழரைச் சனியின் தொடக்கமான, விரயச் சனியாக தொடர்வதால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியுமோ, முடியாதோ என்றெல்லாம் சில நேரங்களில் சங்கடப்படுவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களில், உள் விவகாரங்களில் மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்காதீர்கள். எளிதாக முடித்து விடலாம் என நினைத்த காரியங்களைக் கூட போராடித் தான் முடிக்க வேண்டி வரும்.

வீண் அலைக்கழிப்புகள் அதிகமாகும். எதிர்காலம் பற்றிய பயம் வந்துப் போகும். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். உறவினர், நண்பர்கள் வீட்டு திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசத்தை நீங்களே செலவு செய்து முன்னின்று முடிப்பீர்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம். திடீர் பயணங்களால் திணறுவீர்கள்.

இந்த குரோதி வருடம் முழுவதும் உங்கள் ஜென்ம ராசியிலேயே ராகுவும், 7-ல் கேதுவும் தொடர்வதால் எளிதில் செரிமானமாகும் உணவுகளை உட்கொள்ளுங்கள். உடம்பில் இரும்பு, சுண்ணாம்புச் சத்து குறையும். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். தினசரி நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் சட்டப்படி ஆவணங்களையெல்லாம் தயாரித்து வழக்கறிஞர் மூலமாக இறங்குவது நல்லது. வெற்றுத் தாளில் கையொப்பமிட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள்.

வியாபாரத்தில் பழைய தவறுகள் நிகழ்ந்து விடாத வண்ணம் பார்த்துக் கொள்வீர்கள். இழப்பு களை சரி செய்வீர்கள். இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களை கவருவீர்கள். பதிப்பகம், போர்டிங், லாஜிங், ஸ்பெகுலேஷன், ஏற்றுமதி- இறக்குமதி வகைகளால் லாபமடைவீர்கள். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர் பங்குதாரராக அறிமுகமாவார்.

உத்தியோகத்தில் இருந்த அலட்சியப் போக்கு மாறும். தடைப்பட்டிருந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மூத்த அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். சக ஊழியர்களும் மதிக்கத் தொடங்கு வார்கள். கேட்ட இடத்துக்கே மாற்றம் கிடைக்கும். உங்களுடைய ஆளுமைத் திறன் பாராட்டிப் பேசப்படும். பொய் வழக்கிலிருந்து விடுபடுவீர்கள்.

இந்த குரோதி ஆண்டு அனைத்திலும் வெற்றி பெற வைப்பதுடன், பணம், பதவியையும் அள்ளித் தருவதாகவும் வாழ்வில் புதிய சகாப்தத்தையும் படைக்கும் வல்லமையையும் தரும்.

பரிகாரம்: மதுரை மாவட்டத்தில் அருள்பாலிக்கும் மீனாட்சி அம்மனை சென்று வணங்குங்கள். சாலை விபத்தில் சிக்கியவருக்கு உதவுங்கள். கடன் பிரச்சினை தீரும்.

- வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x