Published : 29 Jan 2025 01:21 PM
Last Updated : 29 Jan 2025 01:21 PM
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - ராசியில் சுக்கிரன், ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு (வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய்(வ) - களத்திர ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சூரியன், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரகநிலை உள்ளது.
கிரகமாற்றங்கள்: 05.02.2025 அன்று லாப ஸ்தானத்தில் இருந்து புதன் அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 11.02.2025 அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு வக்ரம் நிவர்த்தி ஆகிறார் | 12.02.2025 அன்று லாப ஸ்தானத்தில் இருந்து சூரியன் அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 21.02.2025 அன்று சுக ஸ்தானத்தில் செவ்வாய் வக்ரம் நிவர்த்தி ஆகிறார் | 26.02.2025 அன்று தொழில் ஸ்தானத்தில் இருந்து புதன் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: மீன ராசியினரே... நீங்கள் கற்பனை வளமும் கலையார்வமும் மிக்கவர்கள். நட்பிற்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். இந்த மாதம் விருப்பங்கள் கைகூடும். ராசிநாதன் சஞ்சாரத்தால் பயன் தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். தனாதிபதி செவ்வாய் சஞ்சாரம் மூலம் பணவரத்து குறையும். வாழ்க்கை துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை.
தனாதிபதி செவ்வாய் தொழில் ஸ்தானத்தை பார்க்கிறார். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும். வழக்கம்போல் வியாபாரம் இருந்தாலும் திடீர் பணதேவை ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த வேலையை செய்யும் முன்பும் அதுபற்றி அதிகம் யோசிப்பார்கள். சிலருக்கு புதிய வேலையும் கிடைக்கலாம்.
குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். உறவினர்கள் வகையில் செலவுகள் ஏற்படலாம். நண்பர்களால் இருந்து வந்த கருத்து வேற்றுமை அகலும். பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் பணதேவை உண்டாகலாம்.
கலைத்துறையினருக்கு எல்லா பிரச்சினைகளும் சுமூகமாக முடியும். வீண் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும். பணவரத்து தாமதப்படும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் தாமதப்படும்.
பழைய பாக்கிகள் வசூலாவதில் மெத்தனம் காணப்படும். எந்த ஒரு வேலையையும் அலைந்து செய்து முடிக்க வேண்டி இருக்கும். எந்த ஒரு முடிவையும் எடுக்கும்போது ஒருமுறைக்கு பலமுறை யோசிப்பது நல்லது. மற்றவர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு தொழிற்கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். திட்டமிட்டு படிப்பது எதிர்காலத்திற்கு உதவும். திறமையுடன் காரியங்களை செய்வீர்கள்.
பூரட்டாதி 4ம் பாதம்: இந்த மாதம் முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் சாதகமாக நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும்.
உத்திரட்டாதி: இந்த மாதம் குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சினைகள் நீங்கி அமைதி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனகசப்பு மாறும். விருந்தினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவுகள் குறையும். பிள்ளைகள் உங்களது ஆலோசனைகளை கேட்பார்கள். அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பீர்கள்.
ரேவதி: இந்த மாதம் நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும். குடும்பத்தினர் தொடர்பான கவலைகள் நீங்கும். அவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். தாய்வழி சொத்துக்கள் சேரும்.
பரிகாரம்: சித்தர்களை வணங்கி வர மனகவலை நீங்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும் | அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 18, 19 | அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12 | இந்தமாதம் கிரகங்களின் நிலை:
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment