Published : 22 Feb 2023 05:13 PM
Last Updated : 22 Feb 2023 05:13 PM

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ பிப்.23 - மார்ச் 1

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்) கிரகநிலை - ராசியில் ராகு - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - சப்தம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் புதன், சூரியன் - விரைய ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - என கிரகநிலை இருக்கிறது.

பலன்கள்: இந்த வாரம் வீடு, மனை ஆகியவற்றை வாங்குவதற்கு இருந்து வந்த தடைகள் நீங்கும். அதே வேளையில் வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளில் இருந்து வந்த தடைகள் முற்றும் முழுவதுமாக நீங்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். தாயார் தாய் வழி உறவினர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகளும் அகலும்.

தொழிலதிபர்களுக்கு தொழிலில் நல்ல ஏற்றம் காணப்படும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும். வியாபாரத்தில் இருந்து வந்த தொய்வுநிலை மாறி சீரான வேகம் பிடிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்குவதோடு மட்டுமல்லாமல், எதிர்பார்த்த பணியிடமாற்றம், பதவி உயர்வு நிச்சயமாக கிடைக்கும்.

வேலை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய சிறப்பான வேலை அமையும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் நீங்கும். பெற்றோர்கள், ஆசிரியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

பரிகாரம்: அருகிலிருக்கும் முருகன் ஆலயத்திற்குச் சென்று அரளிப்பூ அர்ச்சனை செய்து வழிபடவும்.

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ராசியில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் புதன், சூரியன் - லாப ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - விரைய ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை இருக்கிறது.

பலன்கள்: இந்த வாரம் உங்களுக்கு தைரியம் அதிகரிக்கும். இளைய சகோதர்கள், நண்பர்கள் ஆகியோருடன் இருந்து வந்த மனக்கசப்புகள் மாறும். வாழ்க்கைத்துணையுடன் தேவையில்லாமல் கருத்து மோதல்கள், கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஆனால் அந்த விஷயத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வது உங்களுக்கு நன்மையைத் தரும்.

தந்தையார், தந்தையார் வழி உறவினர்களுடன் இருந்து வந்த மனத்தாங்கல்கள் தீரும். முன்னோர்களின் சொத்துக்கள் உங்கள் கைக்கு வந்து சேர வேண்டிய காலம் கணிந்து விட்டது என்று சொல்லலாம். தொழிலதிபர்களுக்கு தொழிலில் நல்ல மாற்றங்கள் இருக்கும். உப தொழில் ஆரம்பிப்பதற்கான சூழிநிலை ஏற்படும். தேக்க நிலை அடியோடு மாறும்.

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பணியிடமாற்றம் கிடைக்கும். பணி நிமித்தமாக குடும்பத்தை விட்டு வெளியூர் அல்லது வெளிநாடு பயணம் செல்ல வேண்டி வரலாம். மாணவர்களைப் பொறுத்த வரை இந்த காலகட்டத்தில் வெளிநாடு சென்று படிப்பதற்கான சூழ்நிலை காணப்படும். மேற்படிப்பு படிப்பதற்கான இருந்து வந்த தடைகள் நீங்கும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று தாயாருக்கு மல்லிகைப் பூவை அர்ப்பணித்து வலம் வரவும்.

மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் புதன், சூரியன் - தொழில் ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - லாப ஸ்தானத்தில் ராகு - விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை இருக்கிறது.

பலன்கள்: இந்த வாரம் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன் பல முறை யோசித்துச் செயல்படுவது நன்மை தரும். பணம் சார்ந்த பிரச்ச்சினைகள் முற்றிலும் நீங்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். மருந்து, ரசாயனம் போன்ற தொழில்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான காரியங்களில் ஈடுபடும் போது அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது காரிய வெற்றியை உண்டாக்கும். எளிதில் மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்பு உண்டு.
மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டி குறையும். எதையும் அவசரப்படாமல் நிதானமாக செய்வது நல்லது.

பரிகாரம்: முருகனுக்கு விரதம் இருந்து வணங்க பிரச்சினைகள் குறையும். மனதில் அமைதி உண்டாகும்.

கடகம் (புனர் பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை: சுக ஸ்தானத்தில் கேது - சப்தம ஸ்தானத்தில் சனி - அஷ்டம ஸ்தானத்தில் புதன், சூரியன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை இருக்கிறது.

பலன்கள்: இந்த வாரம் நீண்ட நாட்களாக தடைபட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். மனதில் சஞ்சலம் ஏற்பட்டாலும் அதிர்ஷ்டம் உண்டாகும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருந்தாலும் கொள்கைக்காக பாடுபடுவீர்கள். அதிகம் பேசுவதை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர் சொல்வதை நம்பும் முன் அதைப்பற்றி ஆலோசனை செய்வது நல்லது. குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு இருக்கும்.

பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். அதனால் நன்மையும் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஒரே குறிக்கோளுடன் இருப்பதை விட்டு வாடிக்கையாளர் தேவை அறிந்து செயல்படுவது முன்னேற்றத்திற்கு உதவும். பணவரத்து அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் துணிச்சலாக வேலைகளை செய்து வெற்றி பெறுவார்கள். சக ஊழியர்கள் மேலதிகாரிகளால் நன்மையும் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கூடுதல் கவனத்துடன் படிப்பீர்கள். ஆசிரியர், சக மாணவர் மத்தியில் நன்மதிப்பு உண்டாகும்.

பரிகாரம்: கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வர பணத்தட்டுப்பாடு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும்.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்) கிரகநிலை - தைரிய வீர்ய ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - களத்திர ஸ்தானத்தில் புதன், சூரியன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை இருக்கிறது.

பலன்கள்: இந்த வாரம் கடித போக்குவரத்து சாதகமான பலன் தரும். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. மனதில் தைரியம் உண்டாகும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் கலகலப்பு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும்.

அக்கம்பக்கத்தினரிடமும் உறவினர்கள், நண்பர்களிடம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதூரியமான பேச்சின் மூலம் தங்களது வியாபாரத்தை லாபகரமாக செய்வார்கள். தேவையான பண உதவியும் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக உழைப்பும் அதற்கேற்ற பலனும் உண்டாகும். எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும். எதிர்பார்ப்புகளை குறைத்து இருப்பதை வைத்து முன்னேற முயற்சிப்பது நல்லது.

பரிகாரம்: புதன்கிழமையில் நவகிரகத்தில் புதனை நெய்தீபம் ஏற்றி வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், சூரியன் - சப்தம ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை இருக்கிறது.

பலன்கள்: இந்த வாரம் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை வெற்றிகரமாக செய்வீர்கள். ஆனால் தாமதமான பலனே கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக வந்து சேரும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் நிதானமாக பேசுவது குடும்ப அமைதியை தரும். நண்பர்கள், உறவினர்கள் விலகி செல்வது போல் இருக்கும். விட்டு பிடிப்பது நல்லது. குழந்தைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக இல்லாவிட்டாலும் நிதானமாக இருக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் ஆலோசித்து செய்வது நன்மைதரும். மேலதிகாரிகள் கூறுவதற்கு மாற்று கருத்துக்களை கூறாமல் இருப்பது நல்லது. மாணவர்களுக்கு எதையும் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசித்து செய்வது நன்மை தரும். கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள்.

பரிகாரம்: அம்மனுக்கு பூஜை செய்து விரதம் இருப்பது கஷ்டங்களை போக்கும். மன குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும்.

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை - ராசியில் கேது - சுக ஸ்தானத்தில் சனி - பஞ்சம ஸ்தானத்தில் புதன், சூரியன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு, சுக்ரன் சப்தம ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை இருக்கிறது.

பலன்கள்: இந்த வாரம் வீண் அலைச்சல் குறையும். சிக்கல்கள் தீரும். எண்ணிய காரியம் கைகூடும், குறிக்கோள் நிறைவேறும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதங்கள் உண்டாகலாம். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு வெளியே தங்க நேரிடலாம். வீண்செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உஷ்ணம் சம்பந்தமான நோய் உண்டாகலாம்.

அடுத்தவரை பார்த்து எதையும் செய்ய தோன்றலாம். அதனை விட்டு விடுவது நல்லது. சமூகத்தில் அந்தஸ்து உண்டாகும். தொழில் வியாபாரத்தில் மாற்றம் செய்ய எண்ணுவீர்கள். சிலர் புதிய தொழில் தொடங்க முற்படுவார்கள். அவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களின் தேவைகளை சமாளித்து விடுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் உண்டாகும். குறிக்கோளை அடைவது லட்சியமாக கொண்டு செயல்படுவீர்கள். புதிய தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் மதிப்பெண் பெற எண்ணுங்கள். அதற்கான முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.

பரிகாரம்: தினமும் கோதுமை தூளை காகத்திற்கு வைக்க பிரச்சினைகள் குறையும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும்.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் புதன், சூரியன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - சப்தம ஸ்தானத்தில் செவ்வாய் - விரைய ஸ்தானத்தில் கேது என கிரகநிலை இருக்கிறது.

பலன்கள்: இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். தொல்லைகள் தீரும். மனதில் இருந்த வீண் கவலைகள் நீங்கும். கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. பணவரத்து தாமதப்படும். வீண் ஆசைகள் உண்டாகலாம் கவனம் தேவை. குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.

பிள்ளைகள் விஷயத்தில் கவனமும், அனுசரணையும் இருப்பது நல்லது. உறவினர், நண்பர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் வேகம் குறைந்தாலும் திருப்திகரமாக நடக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த ஆர்டர்கள், சரக்குகள் வருவதிலும் தாமதம் உண்டாகலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களின் ஆலோசனையை கேட்டு செயல்படுவதை தவிர்ப்பது நல்லது. மேல் அதிகாரிகள் மூலம் நன்மை உண்டாகும். மாணவர்களுக்கு எதிலும் நல்லது கெட்டதை யோசித்து அதன் பின்பு அந்த காரியத்தில் ஈடுபடுவது நன்மை தரும். கல்வியில் கூடுதல் கவனம் தேவை.

பரிகாரம்: புதன்கிழமையில் பெருமாளை வணங்கி புளியோதரை விநியோகம் செய்ய மனதெளிவு உண்டாகும். அறிவு திறன் அதிகரிக்கும்.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்) கிரகநிலை - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன், சூரியன் - சுக ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலை இருக்கிறது.

பலன்கள்: இந்த வாரம் வீண் அலைச்சல் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். மனதில் தெளிவு உண்டாகும். ஆக்கபூர்வமாக எதையும் செய்யும் எண்ணம் தோன்றும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். தெளிவான முடிவுகள் மூலம் நன்மை உண்டாகும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து எதையும் மனம்விட்டு பேசி செய்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

குடும்ப வருமானம் அதிகரிக்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. பணம் வரும் வாய்ப்பு உள்ளது. தொழில் வியாபாரம் தொடர்பான கடிதப் போக்குவரத்தால் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் விரிவுபடுத்துவது தொடர்பான திட்டங்கள் தோன்றும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்களால் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகள் கூறுவதை மறுத்து பேசாமல் அனுசரித்து செல்வது நன்மையை தரும். மாணவர்கள் ஆசிரியர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பதும், பாடங்களில் இருக்கும் சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு தெரிந்து கொள்வதும் வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: குரு பகவானை வணங்கி வர செல்வம் சேரும். வாழ்க்கை துணையின் ஆதரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சனி - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், சூரியன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - சுக ஸ்தானத்தில் ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் கேது என கிரகநிலை இருக்கிறது.

பலன்கள்: இந்த வாரம் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். மனோதைரியம் உண்டாகும். எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். அந்நிய நபர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. எதிர்ப்புகள் நீங்கி உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். எதிர்பார்த்த தகவல் நல்ல தகவலாக இருக்கும்.

கணவன், மனைவி இருவரும் எந்த ஒரு முடிவையும் நிதானமாக யோசித்து எடுப்பது நன்மை தரும். அவசரத்தை தவிர்ப்பது நல்லது. சகோதரர் வழியில் உதவியை எதிர்பார்க்கலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அதிக உழைப்பின் மூலம் லாபம் கிடைக்க பெறுவார்கள். பொருளாதாரம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் கூடுதல் உழைப்பின் மூலம் செய்து முடிக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். தேவையான உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: சிவன், நவகிரகங்களை வணங்கி தீபம் ஏற்றி வழிபட்டு வர எதிர்ப்புகள் விலகும். பிரச்சினைகளில் சுமூக முடிவு உண்டாகும். தைரியம் கூடும்.

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் புதன், சூரியன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் ராகு - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - விரைய ஸ்தானத்தில் சனி என கிரகநிலை இருக்கிறது.

பலன்கள்: இந்த வாரம் வாக்கு வன்மையால் எதையும் சாதகமாக செய்து முடிப்பீர்கள். திறமை அதிகரிக்கும். திட்டமிட்டபடி செயலாற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின் போதும் எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

பிள்ளைகளிடம் கனிவுடன் பேசுவது நல்லது. விருந்தினர் வருகை இருக்கும். குடும்ப பிரச்சினைகளில் சாதகமான முடிவே உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சினால் எதிலும் லாபம் காண்பார்கள். வர்த்தக திறமை அதிகரிக்கும். பணவரத்தும் திருப்திகரமாக இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையால் முன்னேற்றமடைவார்கள். இழுபறியாக இருந்த வேலையை துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு திறமையால் முன்னேற்றம் உண்டாகும். கஷ்டமான பாடங்களையும் துணிச்சலாக படித்து முடிப்பீர்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

பரிகாரம்: சித்தர்களை வணங்க குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பண கஷ்டம் குறையும்.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - ராசியில் குரு, சுக்ரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி - அயன சயன போக ஸ்தானத்தில் புதன், சூரியன் என கிரகநிலை இருக்கிறது.

பலன்கள்: இந்த வாரம் பல வழிகளிலும் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். ஆனால் எந்த ஒரு வேலையிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. குடும்பத்தில் சுமூகமான நிலை காணப்படும். ஆனாலும் மனதில் குடும்பம் தொடர்பான கவலை, பிள்ளைகள் பற்றிய கவலை இருந்து வரும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. திடீர் இடமாற்றம் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகம் உண்டாகலாம். வீண் செலவுகள் கவுரவ குறைச்சல் ஏற்படலாம். மிகவும் கவனம் தேவை. தாய் தந்தையின் உடல் நிலையிலும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரத்தில் மெத்தன போக்கு காணப்பட்டாலும் தேவையான பணவரத்தும் இருக்கும். புதிய முயற்சிகளில் தாமதமான நிலை காணப்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சல் காரியங்களில் இழுபறி என்ற நிலையை காண்பீர்கள். பேச்சை குறைத்து செயலில் ஈடுபடுவது நன்மையை தரும். மாணவர்களுக்கு கல்வியில் மெத்தன போக்கு ஏற்படாமல் தீவிர கவனத்துடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு வழி வகுக்கும்.

பரிகாரம்: ஊனமுற்றவர்களுக்கு தொண்டு செய்வதும் பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவதும் கஷ்டங்களை நீக்கி வீண் விரயத்தை குறைக்கும். காரியத்தடை நீங்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x