Published : 14 Sep 2022 04:49 PM
Last Updated : 14 Sep 2022 04:49 PM

கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ செப்.15 - 21

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கடகம் கிரகநிலை - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் கேது - சப்தம ஸ்தானத்தில் சனி(வ) - பாக்கிய ஸ்தானத்தில் குரு(வ) - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

இந்தமாதம் 17-ம் தேதி - புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

இந்தமாதம் 17-ம் தேதி - சூர்யன் பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்: ராசிநாதன் சந்திரன் மிகவும் அனுகூலமாக சஞ்சரிக்கிறார். 5-ம் இடமும் - 9-ம் இடமும் மிகவும் பலமாக இருக்கிறது. உங்களின் வெற்றிக்கு வழிகாட்டுதல்கள் வந்து சேரும். தொழிலில் இருந்த சுணக்க நிலை மாறும். உங்களுக்காக உழைப்பவர்கள் இருக்கும் வரையில் உங்களை யாராலும் அசைக்க முடியாது.

உத்தியோகஸ்தர்கள் வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்கள் இப்போது அதற்கான நேரம் தான். உங்களின் கனவு இப்போது நனவாகும். உங்கள் மேலதிகாரியின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குடும்பத்தில் வேறொருவர் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வது குடும்ப நிம்மதிக்கு வழிவகுக்கும். சிலரது பேச்சுகள் விதாண்டவாதமாக இருக்கும். விட்டுக் கொடுத்து செல்வதால் பிரச்சினைகளை முற்றிலுமாக தவிர்க்கலாம்.

பெண்கள் வேலைக்குச் செல்லும் போது மிக கவனமுடன் சென்று வரவும். பணிச்சுமை அதிகமாக இருக்கும்.அரசியல்வாதிகளுக்கு சிலர் வதந்திகள் மூலம் உங்களை ஏமாற்ற நினைப்பார்கள். ஆனால் நீங்கள் சுதாரிப்பாக இருப்பது நலம். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வந்து குவியும். மாணவர்கள் சகமாணவர்களுடன் பழகும் போது கவனமாக இருக்கவும். பிறர் பழிக்கு நீங்கள் ஆளாக நேரலாம்.

புனர்பூசம் - 4 பாதம்: எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவினை எடுப்பீர்கள்.

பூசம்: எதிர்பார்த்த நல்ல செயல்கள் நடக்கும்.

ஆயில்யம்: சாமர்த்தியமாக பேசி காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

பரிகாரம்: அபிராமி அந்தாதி படித்து வர வாழ்வில் நிம்மதி கிடைக்கும்.

***********

சிம்மம் கிரகநிலை - ராசியில் சூர்யன், புதன்(வ), சுக்கிரன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி(வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு(வ) - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

இந்தமாதம் 17-ம் தேதி - புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

இந்தமாதம் 17-ம் தேதி - சூர்யன் பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்: ராசிநாதன் சூரியன் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார். ராசியில் இருக்கும் புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். உடனிருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தொழிலில் இருந்த இடையூறுகளைக் களைவீர்கள். உங்களுக்கு சாதகமாகவே உங்களது தொழில் பங்குதாரர் செயல்படுவார். தொழிலாளர்களின் எண்ணங்களை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். வெளிநாடுகளுக்கு செல்ல முனைவோருக்கான தருணம் வந்துவிட்டது. கடல் கடந்து செல்ல வேண்டி வரலாம். வேலைப்பளுவால் உடல் அசதி ஏற்படும். நேரத்திற்கு உணவருந்த முடியாமல் போகலாம். குடும்பத்தில் பிதுர் ராஜ்ஜிய சொத்துகளால் ஏற்பட்ட பிரிவினை முடிவுக்கு வரும். குடும்ப உறுப்பினர்கள் விட்டுக் கொடுத்து போவதால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

பெண்கள் ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். சேமிப்பதில் மிக கவனமாக இருப்பது நல்லது. அரசியல்வாதிகள் முக்கிய நபர்களை சந்திப்பதை திட்டமிட்டு செயலாற்றுங்கள். கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். மாணவர்கள் நண்பர்களுடன் செல்லும் போது கவனமாக இருக்கவும். பெற்றோர் துணையாக இருப்பார்கள்.

மகம்: மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும்.

பூரம்: துணிச்சலாக எதையும் செய்து முடித்து காரிய வெற்றி அடைவீர்கள்.

உத்திரம் - 1 பாதம்: வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

பரிகாரம்: சிவபெருமான் முன் அமர்ந்து வணங்க மனம் ஒருநிலைப்படும்.

***********

கன்னி கிரகநிலை - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி(வ) - சப்தம ஸ்தானத்தில் குரு(வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - விரைய ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), சுக்கிரன் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

இந்தமாதம் 17-ம் தேதி - புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

இந்தமாதம் 17-ம் தேதி - சூர்யன் பகவான் ராசிக்கு மாறுகிறார்.

பலன்: ஒரு வருடத்திற்கு பிறகு ராசிக்கு வரும் சூரியனால் பரிவர்த்தனை யோகத்தைப் பெறுகிறீர்கள். பொருளாதாரத்தில் ஏற்றம் பெறும். தொழில் வியாபாரம் செய்வோர் ஏற்றத்துடன் தொழிலை நடத்துவீர்கள். நிலுவையில் உள்ள பழைய பாக்கிகள் வந்து சேரும். தொழிலை விரிவு படுத்துவதற்கான முயற்சிகள் பங்குதாரர்கள் உதவியுடன் சிறப்பாக நடைபெறும்.

உத்தியோகஸ்தர்கள் புகழ்ச்சிக்கு இடம் கொடுக்க வேண்டாம். சக ஊழியர்கள் நீங்கள் செய்யும் ஒவ்வொரு விசயத்திலும் எதில் குறை கண்டு பிடிக்கலாம் என்று காத்துக் கொண்டிருப்பார்கள் அதனால் கவனமுடன் பணியாற்றுங்கள். செல்வாக்கு உயரும். குடும்பத்தில் பொருளாதார நிலை திருப்தி கரமாக இருக்கும். ஆரோக்கியத்தில் சிறுசிறு உபாதைகள் ஏற்பட்டு பின்பு சரியாகும். உங்களிடம் கடன் வாங்கியிருந்தவர்கள் சரியான நேரத்தில் திருப்பி தராததால் மனச் சங்கடம் ஏற்படக்கூடும்.

பெண்கள் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தால் மேலதிகாரிகளின் நற்பெயரைப் பெறுவீர்கள். முயற்சிகளை தொடர்ந்து செய்து வாருங்கள். கலைத்துறையினர் சிக்கன நடவடிக்கைகளை கையாளுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்துடன் இருக்கும் உரசல்கள் நீங்கும். மாணவமணிகள் அதிக மதிப்பெண் பெறுவதற்கு இரவு பகல் பாராமல் படித்து வருவீர்கள். அதற்கேற்ப பலனும் கிடைக்கும்.

உத்திரம் - 2, 3, 4 பாதங்கள்: நக்ஷத்ரநாதன் சூரியனால் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள்.

ஹஸ்தம்: அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம்.

சித்திரை - 1, 2 பாதங்கள்: எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது.

பரிகாரம்: துளசி மாடத்திற்கு விளக்கேற்றி வர செல்வம் சேரும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x