Published : 15 Sep 2019 09:27 AM
Last Updated : 15 Sep 2019 09:27 AM

புரட்டாசி மாத நட்சத்திரப் பலன்கள் -  திருவோணம் முதல் ரேவதி நட்சத்திரம் வரை  (செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 17ம் தேதி வரை) 


ஜோதிடர் ஜெயம் சரவணன்

திருவோணம் நட்சத்திரம் -


எண்ணங்களில் எழுச்சியும் மனதில் மகிழ்ச்சியும் பொங்கும் மாதம் இது.


கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு விஷயங்களும் நன்றாகச் செல்வது போல் சென்று கடைசியில் ஏமாற்றத்தைத் தந்திருக்கும். இனி வெற்றியை மட்டுமே சந்திக்கப் போகிறீர்கள். நல்ல வேலை கிடைக்கவில்லையே என கவலைப்பட்டவர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். இருக்கும் வேலையில் பதவி உயர்வு உள்ளிட்ட எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லையே என்று மன வருத்தம் கொண்டிருந்தவர்களுக்கு இப்போது அனைத்து மரியாதைகளும் மதிப்பும் உயர்வும் கிடைக்கும்.


திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் உறுதி செய்யப்படும். புத்திர பாக்கியம் கிடைக்கப்பெறும். மருத்துவ செலவுகள் குறையும். நீண்ட நாள் மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள் இப்போது முற்றிலும் குணமாவார்கள். சொந்த வீடு கனவு றிறைவேறும்.


சிறுதொழிலோ பெரிய தொழிலோ... எதைச் செய்தாலும் அதில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும்.புதிய தொழில் தொடங்கும் எண்ணம் உடையவர்கள் இப்போது அதற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். பணம் தாராளமாக வந்து குவியும் .

பெண்களுக்கு - சொத்தில் பங்கு கிடைக்கும். அசையா சொத்து உங்கள் பெயரில் பதிவு செய்யப்படும். ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலைக்கு செல்வோருக்கு பதவி உயர்வு ஊதிய உயர்வு, உங்கள் கருத்துக்கு மரியாதை முதலானவை கிடைக்கும்.

மாணவர்களுக்கு - அனைத்திலும் வெற்றி உண்டாகும் நேரம். மறுகூட்டல் உள்ளிட்ட மதிப்பெண் விஷயங்கள் உங்கள் மனம் மகிழும்படியாக இருக்கும்.

கலைஞர்களுக்கு - எல்லா வாய்ப்புகளும் நல்ல வாய்ப்புகளே! அனைத்தும் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். வெளிநாடு சென்று சாதிப்பீர்கள்.

பொதுப் பலன் - ஆரோக்கியத்தில் எந்த பிரச்சினைகளும் பெரிய அளவில் இருக்காது. அசதி மற்றும் சோம்பல் அதிகமாக இருக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் - சூரிய பகவானை வணங்குங்கள். ஆதித்ய ஹிருதயம் படிக்கவோ கேட்கவோ செய்யுங்கள் கூடுதல் நன்மைகள் உண்டாகும்.

சந்திராஷ்டம தினம் - புரட்டாசி - 8 (செப்டம்பர் – 25)

****************************************

அவிட்டம் நட்சத்திரம் -


நன்மையும் தீமையும் கலந்ததுதான் வாழ்க்கை என்பதை உணரும் மாதம் இது.


இந்த மாதம் பெரும்பாலும் நன்மைகளும் சிறிய அளவில் பாதிப்புகளும் உண்டாகும். மாதத்தின் முதல் 20 நாட்கள் தன வரவு இருக்கும். அடுத்த 10 நாட்கள் செலவுகள் எகிறும்.


உத்தியோகத்தில் நீண்டகாலம் எதிர்பார்த்த இடமாற்றம் இப்போது கிடைக்கும்.புதிய வேலை, புதிய நிறுவனம் என ஒரு சிலருக்கு அமையும். தொழிலில் மன அழுத்தம் தரக்கூடிய பிரச்சினைகள் ஒவ்வொன்றாக இப்போது தீரும். வேலையாட்கள் நல்ல ஒத்துழைப்பு தருவார்கள். அவர்களின் மனக்குறைகளை தீர்க்க முன்வருவீர்கள். திருமணம் நடக்கும்.

பெண்களுக்கு - நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவீர்கள். மனம் மகிழும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பணி நிரந்தரம் கிடைக்கப் பெறுவீர்கள்.

மாணவர்களுக்கு - பெரிய பாதிப்புகள் இல்லை. நன்மைகளுக்கும் குறைவில்லை. படிப்பில் தீவிர கவனம் செலுத்தினால்தான் நன்மைகள் நடக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். .

கலைஞர்களுக்கு - நண்பர் ஒருவரால் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். எழுத்துத் துறை சார்ந்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.

பொதுப் பலன் - மனதில் இனம் புரியாத பயம் உண்டாகும். நடக்காத அல்லது நடைபெற முடியாத விஷயத்தை "நடந்தால் என்னாகும்" என்று உங்களை நீங்களே குழப்பிக் கொள்வீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் - ஐயனார், முனீஸ்வரன் முதலான காவல் தெய்வங்களை வணங்கி வாருங்கள். மனதில் தைரியம் பிறக்கும்.

சந்திராஷ்டம தினம் - புரட்டாசி - 9. (செப்டம்பர் - 26)

*********************************************

சதயம் நட்சத்திரம் -


மன தைரியம், தெய்வ நம்பிக்கைகள் அதிகரிக்கும் மாதம் இது.


குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். ஆன்மிகப் பயணம் உண்டாகும். வீட்டிற்கு புதிய உறுப்பினர் வருவார். அது குழந்தைப் பிறப்பாக இருக்கலாம், அல்லது மருமகளாக இருக்கலாம். வடதிசையில் இருந்து நல்ல தகவல் வந்து சேரும்.


தகவல் தொழில்நுட்பத் துறையினருக்கு வேலையில் இருந்த பிரச்சினைகள் அகன்று நல்ல மனநிலை உருவாகும். ஒரு சிலருக்கு வேலை செய்யும் நிறுவனம் மூலமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். அரசு வழி நெருக்கடிகள் தீரும். வழக்குகள் சாதகமாகும்.


தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கூட்டுத் தொழிலில் கூட்டாளிகளின் ஒற்றுமை பலப்படும். காவல்துறை, நீதிமன்றத் துறையில் பணிபுரிபவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். தரகு தொழில் செய்பவர்கள் நல்ல வருமானம் கிடைக்கப் பெறுவார்கள்.

பெண்களுக்கு - மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கும். பழைய பொருட்களை மாற்றி புதுப் பொருட்களாக வாங்கிப் போடுவீர்கள்." அம்மாவாக " மாறும் பதவி உயர்வு கிடைக்கும். வேலையிலும் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். பிடித்தமான கணவர் அமைவார்.

மாணவர்களுக்கு - முன்னேற்றமான மாதம். தோல்வியடைந்த பாடங்களில் எந்த தங்கு தடை இல்லாமல் இப்போது முடிப்பீர்கள்.அயல் நாட்டு கல்வி பயில விரும்பியவர்களுக்கு அந்த வாய்ப்பு தானாக கிடைக்கும்.

கலைஞர்களுக்கு - சக கலைஞர்களின் பாராட்டு மழையில் நனைவீர்கள். இசை, நாட்டியக் கலைஞர்கள் நிறைய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள்.

பொதுப் பலன் - சுய ஜாதகத்தில் நல்ல திசா புத்தி நடந்தால் அற்புதமான பலன்கள் கிடைப்பது நிச்சயம். குளிர்ந்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம் -‌‌ ஸ்ரீயோக நரசிம்மரை வணங்கி வாருங்கள். நம்பிக்கை, துணிச்சல், லக்ஷ்மி கடாட்சம் பெருகும்.

சந்திராஷ்டம தினம் - புரட்டாசி - 10 (செப்டம்பர் - 27)

*****************************************************


பூரட்டாதி நட்சத்திரம் -


மன இறுக்கங்கள் விலகி மகிழ்ச்சி பொங்கும் மாதம் இது.


கடந்த சில மாதங்களாக இருந்த நெருக்கடிகள் ஒவ்வொன்றாக விலகும். உடல் நலம் முன்பை விட முன்னேற்றம் அடையும்.பணியிடத்தில் உங்கள் மீதிருந்த வீண் பழி அகலும். பணியில் இருந்த பளு குறையும். உயரதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.


கடன் வாங்கி சுப காரியம் ஒன்றை நடத்துவீர்கள். தொழில் ஏற்ற இறக்கம் இல்லாமல் சமமாக இருக்கும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் சிறிய அளவில் கிடைக்கும்.புதிய இயந்திரங்கள் வாங்கி பயன்படுத்தும் எண்ணம் உருவாகும்.சிறு வணிகர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.


கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். ஒரு சிலர் வங்கிக் கடன் வாங்கும் முயற்சியில் வெற்றி காண்பார்கள். அடகு நகைகள் மீட்கும் முயற்சி சாதகமாகும்.

பெண்களுக்கு - சேமிப்புகள் கரையும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் அனைவரிடமும் சுமூகமாக இருப்பது நல்லது.எதிர்மறையான எண்ணங்களை கட்டுப்படுத்துங்கள் சிந்தனைகளை சிதற விடாதீர்கள்.

மாணவர்களுக்கு - மனதை ஒருமுகப்படுத்துங்கள். கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அந்நியர்களிடம் கொஞ்சம் விலகியே இருங்கள்.

கலைஞர்களுக்கு - சிரமம் இல்லாமலும்,பிரச்சினை ஏதும் இல்லாமலும் இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

பொதுப் பலன் - செலவுகள் அதிகரித்தாலும் முடிந்தவரை கட்டுக்குள் வைக்க முயற்சி செய்யுங்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்தாலே கையிருப்பு அதிகரிக்கும். காய்ச்சல் வந்தால் பாடாய் படுத்தும். மூட்டு வலி, கால் பிசகுதல் போன்ற பிரச்சினை வரலாம்.

வணங்க வேண்டிய தெய்வம் - குமார ஸ்தலமான சுவாமிமலை முருகப் பெருமானை வணங்கி வாருங்கள். பாம்பன் சித்தர் எழுதிய சண்முகக் கவசம் பாராயணம் செய்யுங்கள்.

சந்திராஷ்டம தினம் - புரட்டாசி - 11 (செப்டம்பர் - 28)

****************************************************


உத்திரட்டாதி நட்சத்திரம் -


சுகமான நிகழ்வுகள் நடைபெறும் மாதம் இது.


சொந்த வீடு கனவு நிறைவேறும். வாகன மாற்றம் உண்டு. பணிபுரியும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். உயர் அதிகாரியின் ஆதரவோடு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். பதவி உயர்வு உண்டு.வேறு நிறுவனம் மாறும் சிந்தனை இப்போது நிறைவேறும்.


வங்கிப் பணி கிடைக்கவும், இன்சூரன்ஸ் மற்றும் மாநில அரசுப் பணி கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத பணம் இப்போது கிடைக்கும்.புதிய ஒப்பந்தங்கள், அரசு ஒப்பந்தங்கள் கிடைக்கும்.புதிய முயற்சியில் ஈடுபடுவோர் வெற்றி காண்பார்கள்.


திருமணம் உறுதியாகும். குழந்தை பாக்கியம் தாமதம் ஆனவர்களுக்கு இந்த மாதம் புத்திர பாக்கியம் உண்டாகும்.

பெண்களுக்கு - மன வருத்தங்கள் அகலும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்திருந்த தம்பதி, மனவேற்றுமை மறந்து சேர்ந்து வாழ்வர். திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். ஆசிரியர் பணி, அரசுப் பணி கிடைக்கும். வங்கித் தேர்வில் வெற்றி கிடைக்கும்.

மாணவர்களுக்கு - நினைவாற்றல் அதிகரிக்கும். ஆராய்ச்சி மாணவர்கள் சாதனை படைப்பீர்கள்.

கலைஞர்களுக்கு - எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. பதவி ஒன்று தேடி வரும். திடீர் பணவரவும் புதிய வாய்ப்புகளும் கிடைக்கும்.

பொதுப் பலன் - இந்த காலகட்டத்தில் எந்த வாய்ப்பும் எளிதல்ல, கிடைக்கின்ற ஒவ்வொரு வாய்ப்பும் பொன்னானது. சிறுநீரக கல் பாதிப்பு, கை மற்றும் கால் விரல்களில் வலி அல்லது காயம் ஏற்படும்.

வணங்க வேண்டிய தெய்வம் - மகாவிஷ்ணு வழிபாடு, விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்தல் நன்மை தரும். வீட்டின் தரித்திரம் விலகும். சுபிட்சம் குடிகொள்ளும். .

சந்திராஷ்டம தினம் - புரட்டாசி - 12 (செப்டம்பர் - 29)

***************************************************


ரேவதி நட்சத்திரம் -


நினைத்தது நிறைவேறும் மாதம் இது.


எண்ணமும் செயலும் ஒருங்கே பயணித்தால் வெற்றி எளிது என்பதை நன்கு உணர்ந்தவர்கள் நீங்கள். திட்டமிட்ட காரியங்கள் கச்சிதமாக நிறைவேறும். நீண்ட நாட்களாக பேசி வந்த வியாபாரம் இப்போது முடிவடையும்.பூமி சம்பந்தபட்ட வியாபாரம் வெற்றி பெறும்.


பாதியில் நின்ற கட்டிடப் பணிகள் நிறைவடையும்.புதிய வீடு வாங்குவது, கட்டுவது இனிதே நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வோடு கூடிய இடமாற்றம் ஏற்படும். தொழில் வளர்ச்சி நன்றாக இருக்கும். புதிய கிளை துவங்கும் எண்ணம் ஈடேறும். அரசு விரோதம் சமாதானமாக மாறும்.

திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் உறுதி செய்யப்படும். பிரிவை நோக்கி சென்ற தம்பதிகள் பெரிய மனிதரின் அறிவுரையால் மீண்டும் சேர்ந்து வாழ வழிவகைகள் நடைபெறும்.

பெண்களுக்கு - நல்ல வேலை தேடியவர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். அரசு வேலையும், வங்கி உள்ளிட்ட வேலையும் கிடைக்கும். திருமணம் உறுதி செய்யப்படும். ஆபரணங்கள் வாங்க ஆர்வம் காட்டுவீர்கள்.

மாணவர்களுக்கு - நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அரசு உதவித் தொகை கிடைக்கும். பகுதி நேர வேலையும் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு - நாலாபக்கமும் வாய்ப்புகளும், ஆதரவும் கிடைக்கும். அரசின் உதவியோடு வெளிநாட்டு பயணம் செய்வீர்கள்.இசைத்துறையினர் நிறைய ஒப்பந்தங்கள் கிடைக்கப்பெறுவார்கள்.

பொதுப் பலன் - கிடைக்கப்பெறும் வருமானத்தை முதலீடாக மாற்றுங்கள். பின்னர் நல்ல உதவிகரமாக இருக்கும். சைனஸ் பிரச்சினை உள்ளவர்களும், தைராய்டு பிரச்சினை உள்ளவர்களும் மறக்காமல் மருந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் - ஆலங்குடி, திட்டை போன்ற குரு தலங்களுக்கு சென்று வாருங்கள். அருகில் உள்ள ஆலயங்களில் தட்சிணாமூர்த்திக்கு தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

சந்திராஷ்டம தினம் -புரட்டாசி - 13 (செப்டம்பர் - 30)

**************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x