Last Updated : 22 Aug, 2024 11:09 AM

 

Published : 22 Aug 2024 11:09 AM
Last Updated : 22 Aug 2024 11:09 AM

மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஆக.22 - 28

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, செவ்வாய் - சுக ஸ்தானத்தில் புதன் - பஞ்சம் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: உங்களுக்கு இந்த வாரம் நீங்கள் ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவம் சார்ந்த செலவுகள் நேரலாம். ஆயுதங்களைக் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். அடுத்தவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம்.

தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகளிடம் உங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லது.

குடும்பத்தில் நிம்மதி குறையலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும். பெண்களுக்கு சமையல் செய்யும் போது கவனம் தேவை.

அரசியல் துறையினருக்கு பெயர், புகழ், கவுரவம் தேடி வரும். கலைத்துறையினருக்கு நிலுவையிலிருந்த பணத்தொகைகளும் கைக்கு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

அஸ்வினி: இந்த வாரம் பூர்வீகச் சொத்தில் இருந்த இழுபறி மாறும். தொழிலில் இருந்த மந்தகதி போகும். கொடுக்கல் - வாங்கலில் இருந்த சிக்கல் நீங்கும். கண்முன்னே தலை விரித்தாடும் செலவுகளை சமாளிக்க வருமானத்தை தேடி ஓட வேண்டியிருக்கும்.

பரணி: இந்த வாரம் குடும்பத்தாருடன் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தாரின் வெறுப்புக்கு ஆளாக வேண்டியிருக்கும். செல்வாக்கும், அந்தஸ்தும் பாதிக்கப்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். மனதில் விரக்தி மேலோங்கும். தாயாரின் உடல்நலம் பாதிப்படையும். வண்டி வாகனங்கள் விரயச் செலவு வைக்கும்.

கார்த்திகை 1ம் பாதம்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் கவனம் செல்லாது. சிலர் சொந்த பந்தங்களை விட்டுப் பிரிய நெரும். சிலருக்கு உறவும் பகையாகும். கணவன்-மனைவி உறவு நன்றாக இருக்கும். ஆரோக்கியம் திருப்தியாக இருக்கும்.

பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய், வெள்ளிக்கிழமையில் பூஜித்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மனத்துயரம் நீங்கும்.

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ராசியில் குரு, செவ்வாய் - தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன் - சுக ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி(வ) - லாப ஸ்தானத்தில் ராகு என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: உங்களுக்கு இந்த வாரம் சுபச்செலவு அதிகரிக்கும். மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கி சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம் கவனமாக இருப்பது நல்லது. கண் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படலாம். வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம்.

தொழில் வியாபாரத்தில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது. வாடிக்கையாளர்கள் மனநிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். எதிர்பார்த்த பணி உயர்வு கிட்டும்.

குடும்பத்தில் ஏதாவது வேண்டாத பிரச்சினை தலை தூக்கலாம். உறவினர்கள் நண்பர்கள் பிள்ளைகள் என்று யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு மனக்கவலை அகலும்.

கலைத்துறையினருக்கு பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியல் துறையினருக்கு தங்கள் இருப்பை மேலிடத்தில் சொல்வதற்கு ஏற்ற காலகட்டம். மாணவர்களுக்கு உடல்சோர்வு உண்டாகலாம். வீண் அலைச்சலை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் விரோதங்களையும் பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டிவரலாம். உங்கள் மனோதிடத்தைக் குலைக்கும் அளவிற்கு இப்போது உங்கள் எதிரிகள் பலமாகத் தலை தூக்குவார்கள். அவர்களால் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உங்கள் தொழிலுக்கும் சில சோதனைகள் ஏற்படலாம்.

ரோகிணி: இந்த வாரம் உங்களுக்கு நற்பலன்கள் நிகழ வாய்ப்புண்டு. எதிர்ப்படும் கஷ்ட நஷ்டங்களிலிருந்து விடுபட்டு சாமர்த்தியமாய் நஷ்டங்களையும் இழப்புகளையும் தவிர்த்திடுவீர்கள். மகன் மகளால் பெருமையும் கீர்த்தியும் ஏற்படும். மனம் நிம்மதியடையும்.

மிருகசிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த வாரம் வருமானம் பெருகினாலும் செலவுகளும் கூடும். மன இறுக்கம் நீங்கி புதிய தெம்புடன் செயல்படுவீர்கள். நீண்ட நாள் நோயால் அவதியுற்று மருத்துவமனையில் இருந்தவர்கள் குணமடந்து வீடு திரும்புவர். குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த மனக்கசப்புகள் மாறும். குடும்பச் சடங்குகள், தெய்வ ஆராதனைகள், திருமண வைபவங்கள் நிகழும்.

பரிகாரம்: லட்சுமியை வழிபட கடன் பிரச்சினை தீரும். செல்வநிலை உயரும்.

மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி(வ) - தொழில் ஸ்தானத்தில் ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் குரு, செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: உங்களுக்கு இந்த வாரம் நல்ல பலன்களைப் பெற இயலும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். உழைப்பு வீணாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும்.

பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஆர்டர்கள் கைக்கு வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும்.

வரவேண்டிய பணம் வந்து சேரும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து மோதல்கள் அகலும். குடும்பத்தில் இருந்த பிரச்சினை குறையும். கணவன், மனைவி இருவரும் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பெண்களுக்கு வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

கலைத்துறையினருக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். அரசியல் துறையினருக்கு பாராட்டு கிடைக்கும். மாணவர்களுக்கு பெரியோரின் ஆலோசனைபடி செயல்படுவது நல்லது.

மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் பகைவர்களின் தொல்லை குறையும். நீதிமன்றத்தில் இதுவரை அலைக்கழித்த வழக்குகள் முடிவடையும். உங்கள் சொத்துக்கள் மீண்டும் உங்கள் கைக்கு வந்து சேரும். வியாபரம் சிறந்து வருமானம் பெருகும். பணம் கையில் சரளமாகப் புரளும். கூட்டுத்தொழில் பார்ட்னர்கள் இன்முகமாய்ப் பழகுவார்கள்.

திருவாதிரை: இந்த வாரம் சிலர் தங்கள் வசிப்பிடங்களை மாற்றுவர். அடிக்கடி வீடு மாறுவார்கள். பயணங்களின்போது கவனமாக இருக்கவேண்டியது அவசியம். பயணத்தின்போது கைப்பொருள் தொலைந்து போக நேரும். சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. இல்லையென்றால் வம்பு வழக்குகளில் சிக்கிக்கொள்ள நேரும்.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக்கொள்ளாவிட்டால், அரசாங்கத்தால் தொல்லைகள் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளால், பிரச்சினைகளை சந்திப்பார்கள். யாரிடமும் கையூட்டுப் பெறுவதை தவிர்க்கவேண்டும். இல்லையென்றால் காவல்துறையிடம் சிக்கி அவமானப்பட நேரும். வெளிநாட்டுப் பயணம், வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

பரிகாரம்: பெருமாளை பூஜித்து வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும் | இந்த வாரம் கிரகநிலை:

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x