Last Updated : 07 Aug, 2024 05:44 PM

 

Published : 07 Aug 2024 05:44 PM
Last Updated : 07 Aug 2024 05:44 PM

துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஆக.8 - 14

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் குரு, செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) - லாப ஸ்தானத்தில் சுக்கிரன் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: ராசிநாதன் சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சுயசாரத்தில் சஞ்சரிக்கிறார். மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும். மனநிம்மதியும், மனோதிடமும் உண்டாகும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள்.

தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். ராசிநாதன் சுக்கிரன் சஞ்சாரத்தால் புதிய பதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் காணப்படும்.

கணவன், மனைவிக்கிடையில் இருந்த பிரச்சினைகள் தீரும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். உறவினர் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கலைத்துறையினருக்கு காரியங்களை செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும்.

அரசியல்துறையினருக்கு பணவரத்து கூடும். மாணவர்களுக்கு கல்வியில் நினைத்ததை விட கூடுதல் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். மனம் தளராது செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.

சித்திரை 3,4 பாதங்கள்: இந்த வாரம் அடுத்தவரை நம்பி காரியத்தில் இறங்கும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்கும். தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த பணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும்.

சுவாதி: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சினை குழப்பம் போன்றவை ஏற்பட்டு பின்னர் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றலாம். பிள்ளைகளிடம் பேசும் போது எச்சரிக்கை தேவை. உறவினர்களிடம் எந்த உறுதியையும் தராமல் இருப்பது நல்லது.

விசாகம் 1,2,3 பாதங்கள்: இந்த வாரம் அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் சங்கடமான சூழ்நிலை உண்டாகும். சமாளித்து முன்னேறும் திறமை இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்று பாடுபடுவீர்கள். போட்டிகள் சாதகமான பலன் தரும்.

பரிகாரம்: தினமும் துர்காதேவியை வணங்கி வாருங்கள். துர்காஷ்டகம் படியுங்கள் | அதிர்ஷ்டகிழமைகள்: புதன், வெள்ளி

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை: சுக ஸ்தானத்தில் சனி(வ) - பஞ்சம ஸ்தானத்தில் ராகு - களத்திர ஸ்தானத்தில் குரு, செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) - தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: ராசிநாதன் செவ்வாய் குருவுடன் இணைந்து ராசியைப் பார்க்கிறார். மிகவும் அனுகூலமான நேரம் நடந்து கொண்டிருக்கிறது. சமயோசித்தமாக செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்யக் கூடிய உங்களுக்கு இந்த வாரம் பணவரத்து அதிகமாகும். வீண் பிரச்சினைகள் விலகும். ஆனாலும் எதிலும் கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். எந்த காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது.

தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலும், பண விரயமும் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன் செய்வது நல்லது. குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழ்நிலை உண்டாகும்.

கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். உடல் களைப்பும், சோர்வும் உண்டாகலாம். பெண்களுக்கு எந்த காரியத்தில் ஈடுபடும் போதும் யோசித்து செயல்படுவது நல்லது. கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம்.

அரசியல்துறையினருக்கு செலவு கூடும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாக படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.

விசாகம் 4ம் பாதம்: இந்த வாரம் ஆழ்ந்த யோசனையும், அனுபவ அறிவையும் கொண்டு எதையும் சாதிக்க முயற்சிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். எதிர்பாலினத்தாரிடம் பழகும்போது மிகவும் எச்சரிக்கை தேவை. எந்த காரியத்தை செய்தாலும் அதில் வேகத்தை காட்டாமல் மெத்தனமாகவே செய்ய தோன்றும்.

அனுஷம்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகும். பணவரத்து தாமதப்பட்டாலும் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான கவலை உண்டாகும். சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

கேட்டை: இந்த வாரம் குடும்ப விஷயமாக அலைய வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருக்கும் நெருக்கம் குறையும். தாய், தந்தையரின் உடல்நலத்தில் கவனம் தேவை. எதிலும் உற்சாகம் குறைந்து சோம்பல் ஏற்படும்.

பரிகாரம்: மஞ்சள் நிற பூக்களை கொண்டு குரு பகவானை வழிபடுங்கள் | அதிர்ஷ்டகிழமைகள்: செவ்வாய், சனி

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி(வ) - சுக ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு, செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) - பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: ராசிநாதன் குரு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருக்கிறார். தன ஸ்தானம் மிகவும் பலமாக இருக்கிறார். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும்.

தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களை சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதூரியத்துடன் நடந்து கொண்டு நன்மை அடைவார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கக் கூடும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும்.

புதிய வீடு கட்டுவது, பழைய வீட்டை புதுப்பிப்பது போன்ற பணிகளை தொடங்க முற்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். பெண்களுக்கு விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு மேன்மை உண்டாகும்.

அரசியல்துறையினருக்கு எச்சரிக்கையுடன் இருப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு புத்தி சாதூரியத்துடன் நடந்து கொண்டு மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள்.

மூலம்: இந்த வாரம் எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நற்பெயர் பெறுவீர்கள். அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் மிகவும் நன்கு கவனித்து பாடங்களை படிப்பது நல்லது. சகமாணவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

பூராடம்: இந்த வாரம் மனஅமைதி உண்டாகும். எதிலும் நற்பலன் கிடைக்கும். திட்டமிட்டு செயலாற்றுவதிலும், உறுதியான முடிவு எடுப்பீர்கள். வாக்குவன்மையால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். அடுத்தவர் கூறுவதை தவறாக புரிந்து கொண்டு பின்னர் வருத்தப்படும் சூழ்நிலை ஏற்படலாம்.

உத்திராடம் 1ம் பாதம்: இந்த வாரம் கடவுள் பக்தி அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல், சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி நீங்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை.

பரிகாரம்: நமசிவாய மந்திரத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லி வாருங்கள் | அதிர்ஷ்டகிழமைகள்: வியாழன், வெள்ளி | இந்தவாரம் கிரகங்களின் நிலை:

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x