Last Updated : 16 Feb, 2014 03:38 PM

 

Published : 16 Feb 2014 03:38 PM
Last Updated : 16 Feb 2014 03:38 PM

பாலியல் துன்புறுத்தல்: குழந்தைகளைக் காக்க உதவும் 5 அம்சங்கள்

பெரும்பாலான குழந்தைகள் அச்சத் தின் காரணமாகவே, பாலியல் துன்புறுத்தல் களில் இருந்து தப்பிக்க முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு இதுதொடர்பான ஐந்து விஷயங்களைக் கற்பித்தால், இத்தகைய வன்கொடுமைகளில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வார்கள் என பாலியல் துன்புறுத்தலில் இருந்து குழந்தைகளைக் காப்பது தொடர்பான பயற்சி முகாமில் வலியுறுத்தப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டக் குழந்தைகள் நல பாதுகாப்பு அலகு மற்றும் பெங்களூருவை சேர்ந்த சிருஷ்டி என்ற தன்னார்வ தொண்டு அமைப்பும் இணைந்து, திருவள்ளூர் மாவட்டத்தில், பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து குழந்தைகளைக் காப்பது தொடர்பான பயிற்சியை அளித்து வருகிறது.

இந்த அமைப்பு நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று இதுதொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. தமிழகத்தில் முதன்முறையாக, திருவள்ளூர் மாவட்டத்தில் இப்பயிற்சி முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் நிறுவனரும், பிரபல மருத்துவருமான டாக்டர் விஜயலஷ்மி, இப்பயிற்சியின் நோக்கம் குறித்து `தி இந்து’விடம் பகிர்ந்து கொண்டார்.

``இந்தியாவில் நாளுக்கு நாள் குழந்தை களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் அதிகளவில் நடந்துவருகிறது. இதற்கு காரணம், பள்ளிப் பருவத்திலேயே இதுகுறித்து குழந்தைகளிடம் போதிய விழிப் புணர்வு ஏற்படுத்தப்படவில்லை.

இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் 52 சதவீதம் உள்ள தாக `யுனிசெப்’ நிறுவனத்தின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இந்தியர்கள் அனைவரையும் வெட்கப்பட வைக்கிறது இந்த புள்ளி விவரம்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து, பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், சுயஉதவிக் குழு பெண்கள், கிராம மக்கள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து தரப்பினரிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இதுவரை 14 லட்சம் குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம்’’ என்றார்.

திருவள்ளூர் மாவட்டத்தில், இந்த பயிற்சி முகாமை நடத்துவதற்கான காரணம் குறித்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் அலுவலர் சையத் ரவூப் கூறுகையில், ``திருவள்ளூர் மாவட்டத்தில் 100 குழந்தைகள் இல்லங்கள் உள்ளன. இவற்றில் 18 வயதுக்குட்பட்ட மூவாயிரம் குழந்தைகள் உள்ளனர். இந்த இல்லங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இப்பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.”

குழந்தைகள் இல்லத்திலும்...

மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் இல்லத்தில் பாலியல் துன்புறுத்தல்கள் காரணமாக, இதுவரை 10 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த இல்லங்களைத் தொடர்ந்து நாங்கள் கண்காணித்து வருகிறோம்.

பொதுமக்கள் இதுபோன்ற இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு உதவி செய்ய முன்வந்தால், அந்த இல்லங்கள் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா, சுகாதாரத் துறையில் இருந்து சுகாதார சான்று பெற்றுள்ளதா என்பது உள்ளிட்டவை குறித்து பொ துமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

இதன் மூலம், அவர்கள் செய்யும் உதவி குழந்தைகளுக்கு உரிய முறையில் சென்றடைகிறதா என்பது குறித்து உறுதி செய்யப்படுகிறது.

மேலும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட அனைத்து வன்முறை சம்பவங்கள் குறித்து, 1098 என்ற இலவச சைல்டு லைன் தொலைபேசியில் தெரிவிக்கலாம்.

அத்துடன், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (044-27665595/9444516987), மாவட்ட சமூக நல அலுவலர் அலுவலகம் (044-27663912/9443466304) ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்’’ என்றார்.

பெற்றோர், ஆசிரியர் கவனத்துக்கு...

1. பெண் குழந்தைகளின் அந்தரங்க உறுப்புகளின் பெயர்கள் குறித்து அவர்களுக்கு கண்ணியமான முறையில் விளக்க வேண்டும்.

2. தங்களுடைய அந்தரங்க உறுப்புகளை பிறருக்கு தெரியும்படி காட்டக் கூடாது.

3. பிறருடைய அந்தரங்க உறுப்புகளை பார்க்கக் கூடாது.

4. குழந்தைகளிடம் பெற்றோர்களும், ஆசிரியர்களும் மனம் திறந்து பேச வேண்டும். அவர்கள் தெரிவிக்கும் பிரச்சினைகள், புகார்கள் குறித்து காது கொடுத்து கேட்க வேண்டும்.

5. அவர்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டால் அவர்களது உடல் உறுப்புகள் காட்டிக் கொடுத்துவிடும். உதாரணமாக, குழந்தைகள் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படுகிறது எனக் கூறினால், அது சூட்டினால் ஏற்படுகிறது என்பதைக் கூறாமல், மருத்துவரிடம் சென்று காண்பித்து உரிய பரிசோதனை செய்ய வேண்டும்.

பயிற்சி முகாமில் பேசுகிறார் சிருஷ்டி அமைப்பின் நிறுவனர் டாக்டர் விஜயலஷ்மி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x