பிரதமர் அலுவலகத்தில் ‘விருந்து’ - மக்கள் அதிருப்தியால் ஜப்பான் பிரதமரின் மகன் ராஜினாமா

By செய்திப்பிரிவு

டோக்கியோ: ஜப்பான் பிரதமரின் மகன் அரசு இடத்தில் தனியார் விருந்து நிகழ்ச்சியை கொண்டாடியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தனது பதவியை அவர் ராஜினாமா செய்திருக்கிறார்.

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் மகன் ஷோடாரோ கிஷிடா, பிரதமரின் நிர்வாக கொள்கைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், பிரதமரின் இருப்பிடத்தை ஷோடாரோ தனிப்பட்ட விருந்து நிகழ்ச்சிக்காக பயன்படுத்தி இருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் ஜப்பானின் முக்கிய ஊடகங்களில் வெளியாகின. அதில் அரசு கட்டிடத்தில் பலரும் விதிமுறை மீறி அமர்ந்திருக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இந்த விவகாரம் பொதுமக்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அரசு இருப்பிடத்தை ஷோடாரோ தனது சொந்த தேவைகளுக்காக பயன்படுத்துவாரா என்று பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர். எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தில் இதனை விவாதப் பொருளாக்கின.

இந்த நிலையில், செய்த தவறுக்கு பொறுப்பேற்று ஷோடாரோ தனது பதவுயை ராஜினாமா செய்தாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளார்கள் சந்திப்பில் ஃபுமியோ கிஷிடா கூறும்போது, “பிரதமரின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் என்ற முறையில், ஷோடாரோ கிஷிடா நடவடிக்கைகள் பொருத்தமற்றவை. இதற்கு அவர் பொறுப்பேற்க வேண்டும். இதற்காக ராஜினாமா செய்திருக்கிறார். அப்பதவியில் தகாயோஷி யமமோட்டோ நியமிக்கப்படுவார்” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE