பாகிஸ்தானில் ஜனநாயகம் நசுக்கப்பட்டுள்ளது - இம்ரான் கான் வேதனை

By செய்திப்பிரிவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஜனநாயகம் நசுக்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் வேதனையுடன் தெரிவித்தார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், கடந்த 9-ம் தேதி, வழக்கு விசாரணைக்காக இஸ்லாமாபாத் நீதிமன்றத்துக்கு வந்தார். அப்போது அவரை துணை ராணுவப் படையினர் கைது செய்தனர். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.

அல்-காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கு தொடர்பாக பாகிஸ்தானின் தேசிய ஊழல் தடுப்புஅமைப்பின் (என்ஏபி) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்த இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் கடந்த வாரம் முன் ஜாமீன் வழங்கியது. மேலும், வரும் 17-ம் தேதி வரை வேறு எந்தவொரு வழக்கிலும் இம்ரான் கானை கைது செய்யக் கூடாது என்று சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் நேற்று இம்ரான் கான் கூறியதாவது: பாகிஸ்தானில் மோசமான நிலைமை நிலவுகிறது. ஜனநாயகம் மிகவும் தாழ்ந்த நிலைக்குச் சென்றுவிட்டது. ஜனநாயகம் நசுக்கப்பட்டுள்ளது. இனி நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை நீதித்துறைதான்.

நமது ஜனநாயகம் ஒரே ஒருநூலால் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதுதான் நீதித்துறை. போலீஸாரையும், அரசாங்கத்தையும் தடுத்து நிறுத்தியது நீதித்துறைதான். இன்று நான் இங்கு அமர்ந்திருப்பதற்கு அவர்கள்தான் காரணம். முழு தேசமும் நீதித்துறையுடன் நிற்க வேண்டிய நேரம் இது. அரசு என் மீது போலியான பல வழக்குகளைத் தொடர்ந்துள்ளது. இவை அனைத்துமே பொய் என்று நிரூபிப்பேன். இவ்வாறு இம்ரான் கான் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE