இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறையில் வைத்து கொல்ல சதி நடந்ததாக அவர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், கடந்த செவ்வாய்க்கிழமை, வழக்கு விசாரணைக்காக இஸ்லாமாபாத் நீதிமன்றத்துக்கு வந்தார். அப்போது அவரை துணை ராணுவப் படையினர் கைது செய்தனர். அவர்கள் இம்ரான் கானை மூர்க்கமாக இழுத்துச் சென்று காரில் ஏற்றி அழைத்துச் சென்றனர். அறக்கட்டளை முறைகேடு தொடர்பான வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.இம்ரான் கான் கைது சம்பவம்,பாகிஸ்தானில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அவரது ஆதாரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, துணை ராணுவப் படையினரால் கைது செய்யப்பட்ட இம்ரான் கானிடம் செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் ரகசிய இடத்தில் வைத்து ஊழல் தடுப்பு அமைப்பு (என்ஏபி) அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து காவல் தலைமையகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இம்ரான் கான் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டார். ஊழல் வழக்கு தொடர்பாக அவரிடம் மேலும் விரிவாக விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் 10 நாட்கள் காவலில் வைக்க என்ஏபி அனுமதி கோரியது. அதை ஏற்க மறுத்த நீதிமன்றம், இம்ரான் கானை 8 நாட்கள் மட்டும் காவலில் வைத்து விசாரிக்க அனுமதித்தது.
இந்நிலையில், இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது தெஹ்ரீக்-இ- இன்சாப் கட்சி சார்பில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
» பிடிஆர் ஆடியோ விவகாரம் | இன்னொரு அவதூறு வழக்கு தொடர முதல்வருக்கு அண்ணாமலை சவால்
» ‘யாத்திசை’ முதல் ‘சொப்பன சுந்தரி’ வரை - இந்த வாரம் ஓடிடியில் என்ன பார்க்கலாம்?
வழக்கை விசாரித்த நீதிபதிகள் இம்ரான் கான் கைது சட்டத்துக்குப் புறம்பானது என்றும் அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் இம்ரான் கானை சந்தித்த அவரது வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் ஏராளமான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார். அதில், “ இம்ரான் கானுக்கு மாராடைப்பு ஏற்படுத்தும் ஊசி செலுத்தப்பட்டுள்ளது. அவரை கழிப்பறை பயன்படுத்த அனுமதிக்கவில்லை. என்னிடம் இம்ரான் கான் மார்பில் தான் வலியை உணர்வதாக தெரிவித்திருக்கிறார். அவருக்கு உணவும் வழங்கவில்லை” என்று தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இன்று இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி ஆஜராகும் இம்ரான் கான் நீதிமன்றத்திற்கு வெளியே தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.