நட்பு நாடுகளுடன் ஆரோக்கியமான ஆலோசனைகளுக்கு தயார்: பாக். வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ

By செய்திப்பிரிவு

கோவா: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ இந்தியா வந்துள்ளார். பாகிஸ்தான் குழுவிற்கு பிலாவல் தலைமை தாங்கி வந்துள்ளார். பயணத்திற்கு முன்னதாக அவர், இந்தியப் பயணத்தின்போது நட்பு நாடுகளுடன் ஆரோக்கியமான ஆலோசனைகளுக்கு தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பகிர்ந்த வீடியோ பதிவில் அவர், "இந்தியாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டிற்கு பாகிஸ்தான் குழுவிற்கு தலைமை தாங்கி செல்கிறேன். பயணத்தின்போது நட்பு நாடுகளுடன் ஆரோக்கியமான ஆலோசனைகளை முன்னெடுக்க பாகிஸ்தான் தயாராக இருக்கிறது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கோட்பாடுகளை பாகிஸ்தான் எவ்வளவு மதிக்கிறது என்பதற்கும் இந்தப் பிராந்தியத்தின் வெளியுறவு கொள்கைகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதற்கும் எடுத்துக்காட்டு" என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2001-ம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் தற்போது சீனா, ரஷ்யா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஈரான், ஆப்கானிஸ்தான், பெலாரஸ், மங்கோலியா ஆகிய நாடுகள் பார்வையாளர்களாக உள்ளன.

கடந்த 2022ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 22-வது உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடைபெற்றது. அப்போதே இந்த ஆண்டுக்கான மாநாடு இந்தியாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வரும் இன்று மே 4 மற்றும் நாளை 5ஆம் தேதிகளில் மாநாடு கோவாவில் நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE