ருவாண்டாவில் நிலச்சரிவு: 120-க்கும் அதிகமானோர் பலி

By செய்திப்பிரிவு

கிகாலி: கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 120-க்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், "ருவாண்டாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.இதனால் நாட்டின் வடக்கு மாகாணங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. குறிப்பாக மலை பிரதேசங்கள் மழையினால் கடும் நிலச்சரிவை சந்தித்துள்ளன. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 120-க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். பலர் மாயமாகி உள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி விரைவாக நடந்து வருவதாக ருவாண்டா அரசு தெரிவித்துள்ளது.

ருவாண்டாவில் மழையினால் விவசாய நிலங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. இதற்கிடையில் வரும் நாட்களில் ருவாண்டாவில் கனமழை பெய்ய இருப்பதாக அந்நாட்டு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் ஈரநிலங்கள் மற்றும் பிற ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களை இடம்பெயருமாறு அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது.

ருவாண்டாவில் கடந்த சில ஆண்டுகளில் நடந்த மிக மோசமான இயற்கை பேரிடர் பாதிப்பாக இது கருதப்படுகிறது.

காலநிலை மாற்றத்தால் விவசாய விளைச்சல் 2041 - 2060 காலகட்டத்தில் 1.8 முதல் 6.6 சதவீதமாகவும், 2061 - 2080 காலக்கட்டத்தில் 7.2 முதல் 23.6 சதவீதமாகவும் குறையக் கூடும் என்று கடந்த ஆண்டு உலகளாவிய உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பல நாடுகள் தீவிர மழையினால் உணவுப் பொருட்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.

காலநிலை மாற்றம் நம் கண் முன்னே அரங்கேறி வருகிறது. உலகெங்கிலும் லட்சக்கணக்கான வனவிலங்குகள் அவற்றின் பாதிப்பை உணர்ந்து வருகின்றன. மனிதர்களும் அதன் தீவிரத்தை கடந்த பத்து ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகின்றனர்.

இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு பூமி வெப்பமடைதலை குறைப்பதற்கான செயல்பாடுகளை விரைவாக நகர்த்த வேண்டிய சூழலில் மனித இனம் உள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கைகளில் உலக நாடுகளும் இறங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE