அமெரிக்கா | நியூயார்க்கில் ரயிலில் பயணிகளை அச்சுறுத்திய மர்ம நபரின் கழுத்தை சக பயணி இறுக்கியதில் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

நியூயார்க்: அமெரிக்காவில் சுரங்கப்பாதை ரயிலில் பயணிகளை அச்சுறுத்திய மர்ம நபரைப் பிடித்து அவரின் கழுத்தை சக பயணி ஒருவர் இறுக்கிப் பிடித்ததில் அந்த நபர் உயிரிழந்தார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த திங்கள்கிழமை சுரங்கப்பாதை ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலில் இருந்த 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் சக பயணிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, 24 வயது இளைஞர் ஒருவர் பின்புறம் இருந்தபடி அந்த நபரைப் பிடித்து, அவரின் கழுத்தை இறுக்கிப் பிடித்துள்ளார்.

இதையடுத்து சத்தமிட்டுக்கொண்டே, காலால் எட்டி உதைத்து திமிற முயன்றுள்ளார் அந்த மர்ம நபர். ஆனால், அவரை விடாமல் தொடர்ந்து கழுத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டே இருந்துள்ளார் அந்த இளைஞர். சிறிது நேரத்தில் அந்த நபர் சுயநினைவை இழந்துள்ளார். இதனிடையே இதுகுறித்து சக பயணிகள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார் சுயநினைவின்றி இருந்தவரைப் பரிசோதித்ததில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸார் கழுத்தை இறுக்கிப் பிடித்த அந்த இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தினர். எனினும் விசாரணைக்குப் பிறகு அவரை விடுவித்துவிட்டனர். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நபரின் உயிரிழப்புக்கான காரணத்தை அறிய மருத்துவர்களின் உதவியை நாடி உள்ளனர்.

இந்த சம்பவத்தின்போது உடன் இருந்த பத்திரிகையாளர் ஜுவான் அல்பெர்ட்டோ வாஸ்க்யூஸ் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். பின்னர் அதை தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இது பலராலும் பகிரப்பட்டு வருகிறது. சக பயணிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்ட நபரின் கழுத்தை இறுக்கிப் பிடித்த இளைஞருக்கு சக பயணிகள் 2 பேர் உதவுவது அந்த வீடியோவில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த ஜுவான் கூறும்போது, “ரயிலில் ஏறிய மர்ம நபர் சக பயணிகளை அச்சுறுத்தும் வகையில் பேசினார். ‘நான் மிகவும் கோபமாக இருக்கிறேன். எனக்கு தாகமாக இருக்கிறது, எதைப்பற்றியும் எனக்கு கவலை இல்லை. சிறைக்கு செல்லவும் தயங்கவில்லை. எனக்கு மரண தண்டனை விதித்தாலும் கவலை இல்லை. என் உயிரே போனாலும் கவலை இல்லை’ என அந்த நபர் கூறினார். இதனால்தான் சக பயணி ஒருவர் அவரைப் பிடித்து திமிறாமல் பிடித்துக் கொண்டார். ஆனால் அவர் உயிரிழப்பார் என யாரும் நினைக்கவில்லை” என்றார்.

நியூயார்க்கில் நடந்த சம்பவம் போல் இந்தியாவில் நடந்திருந்தால் போலீஸ் நடவடிக்கை எப்படி இருக்கும்? - நியூயார்க்கில் நடந்த சம்பவம் இந்தியாவில் நடந்து இருந்தால் போலீஸாரின் நடவடிக்கை எப்படி இருக்கும் என்பது குறித்து உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் ‘இந்து தமிழ் திசை’-யிடம் கூறியதாவது: பொதுவாக ஒரு கொலைக்கான காரணத்தை முதலில் அலசி ஆராய வேண்டும். அந்த கொலை திட்டமிட்டு, கொலை செய்ய வேண்டுமென்ற எண்ணத்துடன் நடந்ததா அல்லது ஏதேச்சையாக, தற்காப்புக்காக அல்லது பிறரைக் காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணத்துடன் நடந்ததா என்பதைப் பொருத்தே குற்றம் தீர்மானிக்கப்படும்.

இந்திய சட்டத்தில், கொலை நடந்து இருந்தாலும் கூட குற்ற எண்ணம் இல்லாத மன்னிக்கக்கூடிய குற்றமாக இருந்தால் அதற்கு கொலை குற்றத்துக்கான தண்டனை விதிக்கப்படாது. நியூயார்க்கில் ஓடும் ரயிலில் சக பயணிகளுக்கு தொல்லை கொடுத்த 30 வயது நபரின் கழுத்தை 24 வயதான அந்த இளைஞர் 15 நிமிடங்களுக்கு மேலாக விடாப்பிடியாக இறுக்கியதால் அவர் மூச்சுத்திணறி இறந்துள்ளார். அந்த நபர் இறந்து விடுவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. நடந்த சம்பவத்தை ஊகித்துக்கொண்ட நியூயார்க் போலீஸாரும் அந்த இளைஞரை அப்போதே விடுவித்துள்ளனர்.

இந்தியாவில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறது என்றாலும் அது பொதுவானது அல்ல. பணபலம், அதிகாரம், வசதி படைத்தவர்களுக்கு ஒரு மாதிரியான வினையையும், வசதியில்லாத ஏழை, நடுத்தர மக்களுக்கு எதிர்வினையையும் ஆற்றி விடுகிறது. பொதுவாக போலீஸார் எந்த குற்ற சம்பவமாக இருந்தாலும், உச்ச நீதிமன்றத்தால் குற்ற விசாரணை நடைமுறைச்சட்டம் பிரிவு 43 ஏ-ல் கொண்டு வரப்பட்டுள்ள புதிய திருத்தங்களின்படி ‘புகார் மீது விசாரணை’ நடத்தி அதன் பிறகே ஒருவரை கைது செய்ய வேண்டும்.

அப்படி முறைப்படி கைது செய்யப்படவில்லை என்றால் கைதான நபரை உடனடியாக பிணையில் விடுவிக்க சட்டத்தில் இடம் உள்ளது. இந்தியாவில் குற்றத்தை சீர் தூக்கிப்பார்த்து போலீஸார் நடவடிக்கை எடுப்பதில்லை. அனைத்து குற்ற சம்பவங்களையும் ஒரே மாதிரியான கண்ணோட்டத்துடன் பார்க்கின்றனர் என்பதே எனது குற்றச்சாட்டு. தவிர ‘மனித கவுரவத்துக்கான குறியீடு’ உள்ள நாடுகளில் இந்தியாவும் இல்லை, அமெரிக்காவும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE