3 மாதங்களாக உணவருந்தாத காதர் அட்னான் மரணம் - காசா மீது இஸ்ரேல் கடும் வான்வழி தாக்குதல்

By செய்திப்பிரிவு

டெல் அவிவ்: இஸ்ரேல் சிறையில் உணவருந்தாமல் போராட்டத்தை தொடர்ந்த பாலஸ்தீனத்தின் காதர் அட்னான் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் - பாலஸ்தீன கிளர்ச்சியாளர்கள் இடையே மோதல் வெடித்தது.

பாலஸ்தீனத்தை சேர்ந்த காதர் அட்னான் தனி நாடு கோரிக்கைக்காக பல ஆண்டுகளாக குரல் கொடுத்து வந்தவர். இந்த நிலையில்தான் காதர் அட்னானை இஸ்ரேல் ராணுவம் கைது செய்தது. ஆனால், எந்தவித வழக்கு பின்னணியும் இல்லாமல் காதர் அட்னான் கைது செய்யப்பட்டதாக பாலஸ்தீனம் தரப்பில் குற்றச்சட்டப்பட்டது.

சிறையில் இருந்த காதர் அட்னான் கடந்த மூன்று மாதமாக உணவு உண்ணாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். மேலும், இஸ்ரேல் அரசின் மருத்துவ உதவிகளையும் நிராகரித்தார். இந்த நிலையில் நேற்று தனது அறையில் காதர் அட்னான் மயங்கி நிலையில் இருந்ததாகவும், அவரை பரிசோதித்ததில் அவர் மரணம் அடைந்திருப்பது தெரியவந்ததாக இஸ்ரேல் தெரிவித்தது. காதர் அட்னானின் மறைவைத் தொடர்ந்து பாலஸ்தீனத்தின் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தொடங்கினர்.

காசாவின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் நேற்றிரவு கடுமையான வான்வழித் தாக்குதலை ஹமாஸ் அமைப்பின் மீது நடத்தியது. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாகவும், 5 பேர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், காசாவில் காதர் அட்னானுக்கு ஆதரவாக போராட்டக்காரர்கள் பதாகைகள் ஏந்தி இஸ்ரேலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE