துபாய் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் 4 இந்தியர்கள் உட்பட 16 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

தேரா: துபாய் தேராவின் அல் ராஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் நேற்றுமுன்தினம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 16 பேர் உயிரழ்ந்துள்ளனர். 9 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 ஆண்கள், கேரளாவைச் சேர்ந்த ஒரு தம்பதி என 4 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சனிக்கிழமை மதியம் அல் ராஸ் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் 4-வது மாடியில் தீ பற்றி எரிந்தது. இது மற்ற பகுதிகளுக்கும் பரவியது. கரும்புகை சூழ்ந்ததால், கட்டிடத்தில் இருந்தவர்கள் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது. துபாய் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர். 2 மணி நேரத்துக்கு மேல் போராடி அவர்கள் தீயை அணைத்தனர். அதற்குள்ளாகவே கட்டிடத்தில் சிக்கியவர்களில் 16 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்துல் காதர், சாலியாகுந்த் ஆகிய 2 ஆண்கள், கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த ரிஜேஷ் மற்றும் அவர் மனைவி ஜெஷி என 4 இந்தியர்கள், 3 பாகிஸ்தானியர்கள், 1 நைஜீரியப் பெண் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் துபாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டிடத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததே தீ விபத்துக்குக் காரணம் என்று முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும் இவ்விபத்து தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், உயிரிழந்தவர்களின் உறவினர்களை தொடர்புகொண்டு வருவதாகவும் உடல்களை சொந்த ஊருக்கு அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE