“ட்விட்டரை நிர்வகிப்பது ரோலர் கோஸ்டர் ரைடு போல...” - எலான் மஸ்க்

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்: “ட்விட்டரை நிர்வகிப்பது என்பது சற்று வேதனையானது, ரோலர் கோஸ்டர் ரைட் போன்றது” என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு எலான் மஸ்க் வாங்கினார். ட்விட்டர் தளத்தில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் செய்து வருகிறார். குறிப்பாக, பணம் கொடுத்து ப்ளூ டிக் பெற்றுக்கொள்ளும் முறையை அறிவித்தார். மேலும், வெரிஃபைடு பக்கங்களில் புதிய மூன்று நிறங்களை ட்விட்டர் அறிமுகப்படுத்தினார். இதனை தொடர்ந்து ட்விட்டரின் நீல நிறக் குருவி லோகோவுக்குப் பதிலாக, டாக்காயின் கிரிப்டோ கரன்ஸி நிறுவனத்தின் நாய் லோகோவை மாற்றினார். இதனால், டாக்காயின் கிரிப்டோ கரன்ஸியின் மதிப்பு சந்தையில் அதிகரித்தது. பின்னர் மீண்டும் நீலகுருவியை லோகோவாக எலான் மஸ்க் வைத்தார். ஆனால், இதற்குப் பின்னணியில் வணிக நோக்கம் உள்ளது என்றே பலரும் தெரிவித்தனர்.

இந்த நிலையில், பிபிசி நேர்காணலில் எலான் மஸ்க் பேசும்போது, “ட்விட்டரை நிர்வகிப்பது என்பது சற்று வேதனையானது, ரோலர் கோஸ்டர் ரைட் போன்றது. ஆனால் சலிப்பை ஏற்படுத்தவில்லை. சில மாதங்கள் நான் அழுத்தத்தில் இருந்தேன். வேலைபளு அதிகமாக இருந்தது. சில நேரம்நான் அலுவலகத்திலே தூங்கக் கூட நேரிடும். ஆனால் ட்விட்டரை வாங்கியது நான் செய்த சரியான விஷயம்” என்றார்.

மேலும், குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்பட வீடியோ பதிவுகள் ட்விட்டரில் நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு மஸ்க் பதிலளிக்கும்போது, “ எனக்கு அந்த ஆவணப்படத்தில் என்ன உள்ளது என்றெல்லாம் தெரியாது. அங்கிருக்கும் சூழல் எனக்குத் தெரியவில்லை” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE