நிலவிற்குச் செல்லும் விண்வெளி வீரர்கள் பட்டியலை வெளியிட்டது நாசா

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்: நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்ட்டெமிஸ் 2 திட்டத்திற்கான விண்வெளி வீரர்கள் குழுவை நாசா அறிவித்துள்ளது.

நிலவுக்கு மனிதர்களை மீண்டும் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா. இந்தத் திட்டத்திற்கு ஆர்ட்டெமிஸ் என்றும் நாசா பெயர் சூட்டியுள்ளது. கடந்த 1969 வாக்கில் அப்போலோ 11 மூலம் நிலவுக்கு மனிதர்களை அனுப்பி இருந்தது நாசா. அதன் பிறகு இப்போது இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக கடந்த 2022 நவம்பரில் ஆர்ட்டெமிஸ் 1 திட்டத்தின் சோதனை வெள்ளோட்டத்தை வெற்றிகரமாக மேற்கொண்டது. நிலவுக்கு பின்பக்கத்தில் ஓரியான் எனும் கேப்ஸ்யூல் அனுப்பப்பட்டது. அது வெற்றி பெற்றது.

இந்நிலையில் நாசாவும், கனடா நாட்டு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான சிஎஸ்ஏயும் (கனடியன் ஸ்பேஸ் ஏஜென்ஸி) இணைந்து ஆர்ட்டெமிஸ் II திட்டத்திற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வரிசையில் இந்தத் திட்டத்திற்கான விண்வெளி வீரர்கள் குழுவை அறிவித்துள்ளது. இக்குழுவில் நாசா வீரர்கள் ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர், கிறிஸ்டினா ஹாமக் கோச், கனடா விண்வெளி ஆராய்ச்சி நிறுவன வீரர் ஜெரமி ஹான்சென் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவில் ஒரு பெண் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நிலவுக்குச் செல்லும் வீரர்கள் குழுவில் கனடா விண்வெளி வீரர் முதன்முறையாக இடம்பெற்றுள்ளார். ஒரு கறுப்பின வம்சாவளி வீரரும் இருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE