அமெரிக்காவை அடுத்தடுத்து தாக்கிய கடும் சூறாவளி: 32 பேர் பலி; பலர் காயம்

By செய்திப்பிரிவு

நியூயார்க்: அமெரிக்காவை அடுத்தடுத்து கடுமையான சூறாவளிகள் புரட்டிப்போட்ட நிலையில் அங்கே இதுவரை 32 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். சூறாவளிகளால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ” அமெரிக்காவின் மிஸிஸிப்பி மற்றும் அலபாமா மாகாணங்களில் கடந்த வாரம் வீசிய அதிசக்திவாய்ந்த சூறாவளி மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. சுமார் 23 பேர் வரை உயிரிழந்தனர்.

இந்த நிலையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மீண்டும் அமெரிக்காவை சூறாவளிகள் தாக்கியது. இதில் மெம்பிஸ், டென்னஸி ஆகிய மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் வீசிய சூறாவளிகளுகக்கு இதுவரை 32 பேர் பலியாகி உள்ளனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும் சூறாவளியால் நூற்றுக்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. 100க்கும் அதிகமான மக்கள் காயமடைந்துள்ளனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரக்கன்சாஸ், இல்லினாய்ஸ், இண்டியானா, டெலாவேர் ஆகிய மாகாணங்களும் சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சூறாவளி பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் அதிபர் ஜோ பைடன் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் வீடுகளை இழந்த மக்களுக்கு ஆறுதல் கூறியதோடு வேண்டிய உதவிகளை அரசு அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

காலநிலை மாற்றம் நம் கண் முன்னே அரங்கேறி வருகிறது. உலகெங்கிலும் லட்சக்கணக்கான வனவிலங்குகள் அவற்றின் பாதிப்பை உணர்ந்து வருகின்றன. மனிதர்களும் அதன் தீவிரத்தை கடந்த பத்து ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகின்றனர். இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு பூமி வெப்பமடைதலை குறைப்பதற்கான செயல்பாடுகளை விரைவாக நகர்த்த வேண்டிய சூழலில் மனித இனம் உள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கைகளில் உலக நாடுகள் இறங்கும் என்று நம்புவோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE