நியூயார்க்: பெண்களை இல்லத்தரசிகளாக மட்டும் பார்க்காமல் தேசத்தை கட்டமைப்பவர்களாகவும் நம்புகிறார் இந்தியப் பிரதமர் மோடி என்று ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் ருசிரா கம்போஜ் கூறினார்.
சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர தூதர் ருசிரா கம்போஜ் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: மகளிர் மற்றும் சிறுமிகள் பயன் அடைவதற்காக புதிய தொழில் நுட்பங்களை குவித்து புதிய இந்தியாவானது இன்று இயங்கி வருகிறது. பெண்களை இல்லத்தரசிகளாக மட்டுமே இனி பார்க்கக்கூடாது. அவர்களைதேசத்தை கட்டமைப்பவர்களாக வும் நம்புகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையை அடிப்படையாக கொண்டு இந்தியா செயல்படுகிறது. இந்தியா இன்று, மகளிருக்கான வளர்ச்சி என்ற மாடலில் இருந்து மகளிர் தலைமையிலான வளர்ச்சி என உருமாற்றம் பெற்று வருகிறது. எங்களது தலைமையிலான ஜி-20 மாநாட்டில் மகளிர் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பது என்ற முடிவை எடுப்பதில், இந்தியாவின் இந்த உருமாற்றம் பிரதிபலித்து உள்ளது.
வருங்காலத்துக்கு நாம் தயாராக வேண்டும் என்றால், கருத்துகளை பரிமாறிக் கொள்ளும் விவாதத்தின் மைய பொருளாக மற்றும் முடிவை எடுக்கும் நடைமுறை ஆகியவற்றில் பெண் களை இடம் பெற செய்வதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
பாலின சமத்துவத்தை உண்மையாக்க வேண்டும். இதில் எந்தத் தடையும் ஏற்படக்கூடாது. சுவாமி விவேகானந்தர் கூறியது போல், ஒரு பறவை ஒரே ஒரு இறக்கையில் மட்டும் பறக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். பெண்கள் இல்லாமல், உலக வளர்ச்சி என்பது சாத்தியமே இல்லை.
அமைதி மற்றும் நல்லிணக் கத்துக்கு ஆதரவாக ஜி-20அமைப்பு ஒரு வலுவான செய்தியை தெரிவிக்க வேண்டும். இந்த முன்னுரிமைகள் அனைத்தும் இந்தியாவின் ஜி-20 தலைமையின் கருப்பொருளான ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம் என்ற கருப்பொருளில் பதிந்துள்ளது. இவ்வாறு அவர் இதில் பேசியுள்ளார்.