பூகம்பம் விளைவு: 10 அடி நகர்ந்தது துருக்கி

By செய்திப்பிரிவு

துருக்கியில் கடந்த 6-ம் தேதி அடுத்தடுத்து ஏற்பட்ட இரு பயங்கர பூகம்பம் ரிக்டர் அளவில் 7.8, 7.5 என்ற அளவில் பதிவானது. இது பூமியில் துருக்கி அமைந்திருக்கும் டெக்னானிக் பிளேட்டுகள் எனப்படும் அடுக்கை 10 அடி தூரத்துக்கு நகர்த்தியுள்ளதாக புவியியல் ஆராய்ச்சி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பூமிக்கு அடியில் உள்ள அனடாலியன் பிளேட், அரேபியன் பிளேட் மற்றும் யூராசியன் பிளேட் என்ற அடுக்குகளின் எல்லையில் துருக்கி உள்ளது. இதனால் நிலநடுக்கத்துக்கான வாய்ப்புகள் அதிகம். துருக்கியில் தற்போது ஏற்பட்ட பூகம்பத்தால், அனடாலியன் பிளேட் மற்றும் அரேபியன் பிளேட் பகுதியில் 225 கி.மீ தூரத்துக்கு நொருங்கியுள்ளன. இது துருக்கியை பூமியில் 10 அடி தூரத்துக்கு நகர்த்தியுள்ளது.

சேதம் அதிகம்: துருக்கியில் பூகம்பம் பாதித்த அன்டக்யா மற்றும் கரமன்மராஸ் ஆகிய நகரங்களின் செயற்கை கோள் படங்களை பார்க்கும் போது இங்கு சேதம் மிகப் பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது தெரிகிறது.

உயரமான கட்டிடங்கள் இருந்த இடமெல்லாம் தரைமட்டமாகியுள்ளன. காலியாக இருக்கும் மைதானங்களில் தற்போது நூற்றுக்கணக்கான கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது தெரிகிறது.

மீட்பு பணியில் துருக்கி நாட்டின் 77 குழுவினர், 13 நாடுகளைச் சேர்ந்த மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவும், துருக்கி மற்றும் சிரியாவுக்கு, விமானப்படையின் ஐந்து சி-17 ஜம்போ விமானங்களில் 108 டன்களுக்கு மேல் நிவாரண பொருட்களை அனுப்பியுள்ளது. 6-வது ஜம்போ விமானத்தில் நிவாரண பொருட்களை அனுப்புவது பற்றியும் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது.

இதனிடையே, துருக்கி மற்றும் சிரியாவில் பூகம்பம் பாதித்த பகுதிகளில் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே அதிகளவில் சடலங்கள் மீட்பகப்பட்டதால் உயிரிழப்பு எண்ணிக்கை 21,000-ஐ கடந்து விட்டது. பலர் உயிருடனும் மீட்கப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE