ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு: ஈரானின் பிரபல நடிகைகள் இருவர் கைது

By செய்திப்பிரிவு

தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த பிரபல நடிகைகள் இருவரை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹென்காமெஹ் காசியானி, காதாயூன் ஆகியோர் ஈரானின் பிரபல நடிகைகள். இருவரும் சர்வதேச அளவில் சிறந்த நடிகர்களுக்கான விருதுகளை வென்றவர்கள். இவ்விருவரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வந்தனர். தங்களது நடவடிக்கைகளுக்காக இருவரும் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து ஹென்காமெஹ் காசியானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிடும்போது, ”இந்த நிமிடத்திலிருந்து, எனக்கு என்ன நடந்தாலும், எப்போதும் போல, எனது கடைசி மூச்சு வரை நான் ஈரானிய மக்களுடன் இருக்கிறேன் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள நினைக்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

இந்தநிலையில், பொதுவெளியில் தங்களது ஹிஜாப்பை நீக்கியதற்காக ஹென்காமெஹ் காசியானி, காதாயூன் ஆகியோரை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். இருவரது கைது நடவடிக்கையும் ஈரானில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க 'காஸ்த் எர்ஷாத்' என்ற சிறப்புப் பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர். கடந்த செப்டம்பர் 13-ம் தேதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரைச் சேர்ந்த மாஷா அமினி (22) என்ற இளம்பெண் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளனர்.

மேலும், அவரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டதால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்றார். இதையடுத்து கடந்த செப்டம்பர் 16-ம் தேதி மாஷா அமினி உயிரிழந்தார் மாஷாவின் மரணம் தற்போது ஈரானில் பெரும் போராட்டம் ஏற்படக் காரணமானது. இப்போராட்டத்தில் 200க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE