'அடுத்த வாரம் மிகப்பெரிய அறிவிப்பை வெளியிடுகிறேன்' - அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப்

By செய்திப்பிரிவு

டேடன்: அடுத்த வாரம் அரசியல் ரீதியாக மிகப்பெரிய அறிவிப்பை வெளியிடவிருப்பதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

2024ல் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அந்த தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடுவேன் என்பதை ட்ரம்ப் பலமுறை சூசகமாக தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், நாளை அமெரிக்காவுக்கு ஒரு முக்கியமான நாள். அந்தத் தேர்தல் நாள் பரபரப்பில் இருந்து நான் திசைதிருப்புவதாக இல்லை. ஆனால் நவம்பர் 15 ஆம் தேதி நான் ஃப்ளோரிடாவின் பால்ம் பீச்சில் மிக முக்கியமான அறிவிப்பை வெளியிடவிருக்கிறேன் என்றார்.

ரிபப்ளிக் கட்சியைச் சேர்ந்த ட்ரம்ப் கடந்த வாரம் ஒரு பேட்டியின் போது நான் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறு அதிகம் என்று கூறியிருந்தார்.

அமெரிக்காவில் ஒரு நபர் இரண்டு முறைதான் அதிபராக முடியும். முதல் முறை அதிபராக இருந்தவர் பெரும்பாலும் அடுத்த முறையும் போட்டியிடுவார். அப்படிப் போட்டியிட்டவர்களில் வெற்றி பெற்றவர்களே மிகுதி. சமீப காலத்தில் வெற்றியைத் தவறவிட்டவர்கள் மூன்று பேர். ஜிம்மி கார்ட்டர், ஜார்ஜ் டபிள்யூ புஷ் வரிசையில் டொனால்டு ட்ரம்ப் இணைந்தார்.

அமெரிக்காவில் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ட்ரம்ப் தோல்வி அடைந்தார். ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக ட்ரம்ப் குற்றம் சாட்டினார். அத்துடன் பல மாகாணங்களில் வழக்கும் தொடுத்தார். அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதற்கிடையில், அமெரிக்காவின் பல பகுதிகளில் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் கலவரமாக வெடித்தது. இது அமெரிக்க வரலாற்றில் பெரும் கரும்புள்ளியாக கருதப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE