இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பேரணி நடத்தியபோது இம்ரான் கான் (70) துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவத்தில் 24 மணி நேரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு போலீஸாருக்கு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகக் கூறி இம்ரான் கானின் தெக்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சி பஞ்சாப் மாகாணத்திலிருந்து தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி கடந்த 4-ம் தேதி பேரணி நடத்தியது. இதில் கலந்து கொண்ட இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் அவரது வலது காலில் குண்டுபாய்ந்ததையடுத்து மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து, இம்ரான் கானுக்கு காலில் அறுவை சிகிச்சை செய் யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை மருத் துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
‘‘உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக பேரணியில் கொலை முயற்சி நடந்துள்ளது. இது தொடர்பாக இதுவரையில் போலீஸார் வழக்கு பதிவு செய்யவில்லை. புகாரிலிருந்து ராணுவ ஜெனரலின் பெயரை நீக்காதவரை வழக்கு பதிவு செய்ய முடியாது என போலீஸார் தெரிவித்தனர்’’ என முன்னாள் பிரதமரான இம்ரான் கான் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இதனிடையே, இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியது.
» தான்சானியா விமான விபத்து: 19 பேர் பலி; இதுவரை 26 பேர் மீட்பு
» ‘ஆம், ரஷ்யாவுக்கு ட்ரோன்களை விநியோகித்தோம்’ - ஈரான் முதல் முறையாக ஒப்புதல்
அப்போது, பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உமர் அட்டா பண்டயல், பஞ்சாப் காவல் துறை தலைவர் பைசல் சாகரிடம் காணொலி காட்சி மூலமாக விசாரணை நடத்தினார். தலைமை நீதிபதி கூறுகையில். “சம்பவம் நடந்து இத்தனை நாள்கள் ஆகியும் ஏன் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்படவில்லை. எப்ஐஆர் பதிவு செய்யாததற்கு உறுதியான காரணம் எதுவும் இல்லை. எப்போது எஃப்ஐஆர் பதிவு செய்வீர்கள்" என்று கேள்வி எழுப்பினார்.
நீதிக்கான முதல் படி: காவல் துறை தலைவரின் பதிலை பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி ‘‘அனைவரும் சட்டத்தின்படி செயல்பட வேண்டும். நீதிமன்றம் உங்களுடன் உள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்குள் இம்ரான் கான் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பஞ்சாப் போலீஸார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டார். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை வரவேற்றுள்ள இம்ரான் கான் கட்சி ‘‘இது நீதிக்கான முதல் படி’’ என்று தெரிவித்துள்ளது.