இரண்டரை ஆண்டாக உறவு சரியில்லை; சீனாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

By செய்திப்பிரிவு

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள லோவி இன்ஸ்டிடியூட்டில் (சிந்தனை அமைப்பு) வளர்ந்து வரும் ஆஸ்திரேலியாவுடனான இந்திய உறவின் முக்கியத்துவம் குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பேசியதாவது:

லடாக் எல்லையில் கடந்த 2020-ம் ஆண்டு சீன ராணுவம் அத்து மீறி நுழைய முயன்றது. இதை தடுத்த இந்திய வீரர்களுக்கும் சீன வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் சிலர் உயிரிழந்தனர்.

அதன் பிறகு கடந்த இரண்டரை ஆண்டாக இரு நாடுகளுக்கிடையிலான உறவு சரியில்லை. அதேநேரம், பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம்.

எல்லையில் அமைதி அவசியம்

இதுவரை இரு நாடுகளின் ராணுவ படைத் தளபதிகள் நிலையில் 16 சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இருதரப்பு உறவில் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமானால் எல்லையில் அமைதி நிலவ வேண்டும். எனவே, எல்லையில் இந்தியா தொடர்ந்து அமைதியை கடைபிடித்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE