7 நாட்களில் இலங்கைக்கு புதிய அதிபர்: கோத்தபய ராஜினாமாவை உறுதி செய்த சபாநாயகர் தகவல்

By செய்திப்பிரிவு

இலங்கைக்கு இன்னும் 7 நாட்களில் புதிய அதிபர் நியமிக்கப்படுவார் என்று அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் யப அபேவர்தனா தெரிவித்துள்ளார். முன்னதாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச இமெயில் மூலம் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், சபாநாயகர் யப அபேவர்தனா இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர், கோத்தபய ராஜபக்ச சட்டபூர்வமாக தனது பதவியை வியாழனன்று ராஜினாமா செய்துள்ளார். அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இன்னும் 7 நாட்களில் முறைப்படி புதிய அதிபர் நியமிக்கப்படுவார் என்றார்.

1978ல் இலங்கை அரசியலில் அதிபர் பதவி உருவாக்கப்பட்டது. அப்பதவி உருவாக்கப்பட்டதில் இருந்து முதன்முறையாக அதிபர் ஒருவர் ராஜினாமா செய்திருக்கிறார்.

பல மாதங்களாக நீடிக்கும் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில் இலங்கையில் இருந்து அதிபர் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவு சென்றார். அங்கும் அவருக்கு எதிர்ப்பு வலுத்ததால் யுஏஇ விமானத்தின் மூலம் சிங்கப்பூர் சென்றுள்ளார். சிங்கப்பூர் வந்துள்ள அவர் தனிப்பட்ட பயணமாகவே வந்துள்ளார் என்றும் அரசிடம் தஞ்சம் கோரவில்லை என்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

2.2 கோடி மக்கள் தொகை கொண்ட தீவு தேசமான இலங்கையில் பொருளாதார சீரழிவுக்கு ராஜபக்ச குடும்பத்தினர் தான் முக்கியக் காரணம் என்று அந்நாட்டு மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். கடந்த மே மாதம் பிரதமர் மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்தார். அதன் பின்னர் தற்போது அதிபர் கோத்தபய ராஜபக்ச வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டு பதவியை ராஜினாமா செய்துள்ளார். பசில் ராஜபக்ச, மகிந்த ராஜபக்சவின் மகன்கள் எனப் பலரும் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியேறிய போராட்டக்காரர்கள்: அதிபர் கோத்தபய ராஜினாமா செய்தி நேற்றே வெளியான நிலையில் அது உறுதி செய்யப்படாவிட்டாலும் கூட போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறினர். “கோத்தபய ராஜபக்சவை அதிபர் மாளிகையிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அது நடந்துள்ளதால் நாங்கள் அதிபர் மாளிகையிலிருந்து வெளியேறுகிறோம்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE