இலங்கையில் மக்கள் புரட்சி | “அனைத்துக் கட்சி அரசு அமைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்வேன்” - ரணில் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

கொழும்பு: இலங்கையில் மக்கள் புரட்சிப் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அனைத்துக் கட்சி அரசு அமைவதற்காக தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகக் கோரி நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கொழும்பு நகரில் குவிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் இல்லத்தை நோக்கி வந்த மக்களைத் தடுக்க முடியாமல் பாதுகாப்புப் படையினர் திணறினர். அதிபர் மாளிகைக்குள் நுழைந்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஒட்டுமொத்த பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

போராட்டக்காரர்களால் அதிபர் மாளிகை கைப்பற்றப்படுவதற்கு முன்பாகவே அதிபர் கோத்தபய ராஜபக்ச அதிபர் மாளிகையில் இருந்து தப்பியோடிவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் எங்கு சென்றிருக்கிறார் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில், மக்களின் போராட்டம் கட்டுக்குள் கொண்டுவர முடியாத சூழலின் எதிரொலியாக, அனைத்துக் கட்சி அரசு அமைவதற்காக தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்று ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது ட்விட்டர் பக்கத்தில், “அனைத்துக் குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் அரசு உறுதியாக தொடர்வதற்காக ‘அனைத்துக் கட்சி அரசாங்கம்’ என்ற முறையில் புதிய அரசுக்கு வழி வகுக்கும் இன்றைய கட்சித் தலைவர்களின் பரிந்துரையை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

இதற்கு இணக்கமாக எனது பிரதமர் பதவியை நான் ராஜினாமா செய்வேன்” என்று பதிவிட்டுள்ளார்.

என்ன நடக்கிறது இலங்கையில்? - இலங்கை 1948-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரைக் கண்டிராத பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. மக்கள் புரட்சியால் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். ரணில் விக்கிரமசிங்கே இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

இன்னமும் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் தட்டுப்பாட்டிலிருந்து இலங்கை மக்கள் மீளவில்லை. எனவே, அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக வேண்டி இலங்கை தலைநகர் கொழும்புவில் பொதுமக்கள், எதிர்க்கட்சியினர் இன்று பேரணி நடத்துகின்றனர். இலங்கையில் கோத்தபய ராஜபக்ச அரசுக்கு எதிராக இலங்கையில் இதுவரை நடந்த வன்முறையில் 9 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.

இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) மீண்டும் போராட்டம் தொடங்கியுள்ளது. சுமார் 20,000 பாதுகாப்புப் படையினர் கொழும்புவில் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொழும்பு நகரின் பல பகுதிகளில் ஊராடங்கு உத்தரவை போலீஸார் பிறப்பித்துள்ளனர். எனினும், போராட்டக்காரர்கள் முன்னேறி அதிபர் மாளிகையைக் கைப்பற்றினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE