நரா: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது மர்ம நபரால் சுடப்பட்டார். இதனால் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார். அவருக்கு அதிர்ச்சியில் மாரடைப்பும் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் தாக்குதல் நடத்திய நபர் பின்புறம் இருந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
ஜப்பானின் மேற்குப் பகுதியில் உள்ள நரா நகரில் அபே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்ற மேலவைத் தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அந்த நபர் பின்னால் இருந்து சுட்டார். இரண்டு குண்டுகள் பாய்ந்தது. இதில் அபே அப்படியே சரிந்து விழுந்தார். அவருடைய உடல்நிலை குறித்து உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை. அவர் சரிந்து விழும் வீடியோக்கள், மீட்பு வீடியோக்கள், ஏரியல் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
» ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கிச் சூட்டில் காயம்
» பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகல்: பின்புலம் என்ன?
ஜப்பான் அரசு கண்டனம்: முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு நடைபெற்றதை அரசு தரப்பு ஒப்புக் கொண்டுள்ளது. இது குறித்து கேபினட் செயலர் ஹிரோகசு மட்சுனோ கூறுகையில், "முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே காலை 11.30 மணியளில் சுடப்பட்டார். அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் அபேவின் உடல்நிலை குறித்து உறுதியான தகவல் இல்லை. எதுவாக இருப்பினும் இதுபோன்ற காட்டுமிராண்டிததன செயலை பொறுத்துக் கொள்ள முடியாது. நாங்கள் இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்" என்றார்.