கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்தோம்: வடகொரியா வீடியோவுடன் விளக்கம்

By செய்திப்பிரிவு

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பரிசோதனையை நடத்தியதாக வடகொரியா விளக்கம் அளித்துள்ளது.

வடகொரியா கிழக்கு கடற்பகுதியில் ஊகிக்க முடியாத ஏவுகணை சோதனை ஒன்றை வியாழக்கிழமை நடத்தியது. இந்த நடவடிக்கை கொரிய தீபகற்பம், பிராந்தியம் மற்றும் சர்வதேச சமூகத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது என்று தென்கொரியா விமர்சித்திருந்தது. வடகொரியாவின் ஏவுகணை சோதனை குறித்து எந்தத் தகவலும் வெளிவராத நிலையில், வடகொரியா அரசு தமது ஏவுகணை சோதனை பற்றிய விளக்கத்தை அளித்துள்ளது.

இதுகுறித்து வடகொரிய அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில், “வடகொரிய அதிபர் கிம்மின் உத்தரவின்படி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை வியாழக்கிழமை நடத்தப்பட்டது. ஹ்வாசாங்-17 என்று பெயரிடப்பட்ட அந்த ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. பரிசோதனையின்போது அதிபர் கிம் மேற்பார்வையிட்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனை வீடியோவாக பதிவுச் செய்து வடகொரியா வெளியிட்டுள்ளது.

வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அத்துமீறல் என்று ஐக்கிய நாடுகள் சபை விமர்சித்துள்ளது. அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுவதற்காகவே இந்த ஏவுகணை சோதனைக்கு கிம் உத்தரவிடப்பட்டிருப்பதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

வடகொரியா ஜனவரி மாதம் ஏவுகணை பரிசோதனை ஒன்றைச் செய்தது. 2022-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து வடகொரியா இதுவரை 10 ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

கரோனா காரணமாக மோசமான நிலையை அடைந்துள்ள பொருளாதாரத்தைக் கவனிக்காமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேம்படுத்துவதிலேயே கவனம் செலுத்துகிறது என்று ஐ.நா. கடந்த ஆண்டு கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE