சீனாவில் கரோனா அலை: தொழில் நகரில் திடீர் லாக்டவுன்; முடங்கிய 90 லட்சம் மக்கள்

By செய்திப்பிரிவு

பெய்ஜிங்: சீனாவில் ஷென்யாங் நகரம் கடும் பாதிப்பை சந்தித்து வருவதால் அங்கு நேற்று திடீரென லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. சுமார் 90 லட்சம் மக்கள் வசிக்கும் தொழில் நகரமான ஷென்யாங் முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

சீனாவில் தான் கரோனா நோயாளி முதன் முதலில் கண்டறியப்பட்டாலும் அங்கிருந்துதான் உருவானதா என்ற ஆராய்ச்சிகள் இரண்டாண்டுகளுக்கும் மேல் நீண்டு கொண்டிருக்கின்றன. ஆனால் கரோனா இல்லாத தேசம் என்ற இலக்கை முன் வைத்து சீனா கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது.

ஒரே ஒரு நோயாளி கண்டறியப்பட்டாலும் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் அப்பகுதியில் உள்ள ஒட்டுமொத்த மக்களையும் குவாரன்டைன் முகாம்களுக்கு அனுப்பி கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தியது.

சீனாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஒமைக்கரான் பரவல் காரணமாக தொற்று அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து கடும் கட்டுப்பாடுகளை சீனா அமல்படுத்தி வருகிறது. அதேபோல், ஆங்காங்கே தீவிர லாக்டவுன்களையும் சீனா அமல்படுத்தி வருகிறது.

இந்தநிலையில் சீனாவில் கரோனா தொற்று தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 5,280 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்நாடு கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.

குறிப்பாக ஜிலின் மாகாணம் கோவிட்-19 ஒமைக்ரான் மாறுபாட்டின் காரணமாக வேகமாக பரவி வருகிறது. சீனாவில் தற்போதைய தொற்று எண்ணிக்கையில் 30% க்கும் அதிகமாக ஜிலினில் பதிவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஜிலினில், அண்டை மகாணமான லியோனிங்கிலும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இங்குள்ள ஷென்யாங் நகரம் கடும் பாதிப்பை சந்தித்து வருவதால் அங்கு நேற்று திடீரென லாக் டவுன் அறிவிக்கப்பட்டது. சுமார் 90 லட்சம் மக்கள் வசிக்கும் தொழில் நகரமான ஷென்யாங் முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ உள்ளிட்ட கார் தொழிற்சாலைகளும் இந்த நகரில் அமைந்துள்ளன. அங்கு வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இன்று 4,770 புதிய கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கடந்த சனிக்கிழமை 2 இறப்புகளும் நடந்துள்ளன. கடந்த ஒராண்டில் இல்லாத அளவாகும். ஷென்யாங் நகரில் இன்று 47 புதிய கரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

அந்த 47 பேரும் தனிமைச் ‘சிறை’களில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் அடுத்த 20 நாட்கள் வெளியே வர முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட சீனாவில் அதிகரிக்கும் கரோனா அதனைத் தொடர்ந்து லாக் டவுன் அமல்படுத்தப்படுவதால் வளர்ச்சிக்கு ஆபத்து ஏற்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE