ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை தோற்கடித்த ரஷ்யா: இந்தியா வாக்களிக்காதது ஏன்?

By செய்திப்பிரிவு

ஜெனீவா: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்கா, அல்பேனியா முன்மொழிந்த இந்தத் தீர்மானத்தை 11 நாடுகள் அங்கீகரிக்க இந்தியா, சீனா, யுஏஇ ஆகிய நாடுகள் தீர்மானத்தில் வாக்களிக்கவில்லை.

இந்நிலையில், தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரம் கொண்டு தோற்கடித்தது ரஷ்யா. ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் ரஷ்யா நிரந்த உறுப்பினர் என்பதால் அதன் வீட்டோ அதிகாரத்தைக் கொண்டு தீர்மானத்தைத் தோற்கடித்துள்ளது. இருப்பினும், தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ரஷ்ய அதிபருக்கு எதிராக உலக நாடுகள் தங்களது கண்டனத்தைத் தெரிவித்தன.

ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் க்ரீன்ஃபீல்டு பேசுகையில், "ரஷ்யா இந்தத் தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி நசுக்கலாம். ஆனால், எங்களின் குரல்களை உங்களால் நெறிக்க முடியாது. ஐ.நா.வின் கொள்கைகளை நசுக்க முடியாது. உக்ரைன் மக்களையும் உங்களால் நசுக்க முடியாது" என்றார்.

பிரிட்டன் தூதர் பார்பரா வுட்வார்டு, "ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்புக்கு ஆதரவு இல்லை" என்று கூறினார்.

இந்தியா வாக்களிக்காதது ஏன்? - ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து ஆஸ்திரேலியா, எஸ்டோனியா, ஃபின்லாந்து, ஜார்ஜியா, ஜெர்மனி, இத்தாலி, லீசெஸ்டைன், லக்ஸம்பெர்க், நியூசிலாந்து, நார்வே, போலந்து, ருமேனியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் வாக்களித்தன. ரஷ்ய படைகள் உடனடியாக நிபந்தனையின்றி திரும்ப வேண்டும் என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் 15 உறுப்பினர்கள் கொண்ட இந்த பாதுகாப்பு கவுன்சிலில் 11 உறுப்பினர்கள் ஆதரவளிக்க சீனா, இந்தியா, யுஏஇ ஆகிய நாடுகள் வாக்களிக்கவில்லை.

இது குறித்து ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலுக்கான இந்திய பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி, "பேச்சுவார்த்தை மட்டுமே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஒரே வழி. மனித உயிர்களைப் பறிப்பது எந்தத் தீர்வையும் கொடுக்காது. ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தைகள் கைவிடப்பட்டதே தவறு. அதற்காக வருந்துகிறோம். மீண்டும் பேச்சுவார்த்தை பாதைக்கு திரும்புமாறு அனைத்துத் தரப்பையும் வலியுறுத்துகிறோம்.

உக்ரைனில் நடந்து வரும் தாக்குதலால் பெருமளவில் கவலைகொண்டுள்ளோம். வன்முறையை விடுத்து வெறுப்பைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு திரும்புங்கள் என வேண்டுகிறோம். உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள், குறிப்பாக இந்திய மாணவர்களை மீட்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். பல்வேறு காரணங்களுக்காக இந்தியா இந்த தீர்மானத்தில் வாக்களிப்பதைத் தவிர்க்கிறது" என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE